மன்னார் பள்ளிமுனை கடற்கரையில் அமைந்துள்ள மீன் வாடி ஒன்று எரிந்து சாம்பல்!

மன்னார் பள்ளிமுனை கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மீனவர் ஒருவருடைய மீன் வாடி ஒன்றில் திடீர் என ஏற்பட்ட தீ பற்றிக் கொண்டதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியைச் சேர்ந்த சுமந்தன் என்ற மீனவரது வாடியே நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு எரிந்ததுடன் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களும் தீயில் கருகின.

இதன் போது மீன் பிடி உபகரணங்களான படகின் வெளி இணைப்பு இயந்திரம், மீன் பிடி வலைகள் உட்பட சுமார் 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் எரிந்து சாம்பலாகியுள்ளதாக குறித்த மீனவர் கவலை தெரிவித்தார்.

குறித்த மீன் வாடியில் தீ ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் எவையும் இல்லாத நிலையில், இனம் தெரியாத நபர்கள் தீ வைத்திருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மன்னார் பொலிஸார் குறித்த தீப்பரவல் திட்டமிட்ட சதியா? என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.