இன்டர்நெட் வேகம் கிடைக்காததால்.. மரத்தில் ஏறி பாடம் நடத்திய ஆசிரியர்.. குவியும் வாழ்த்துக்கள்!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மே3 வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 25 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1.77 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் 600-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 20,000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதனால், ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடந்த சில நாட்களாகவே மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தி வருகிறார்.

ஆனால், அவருக்கு சரியாக இணைய வேகம் கிடைக்காததால், சற்றும் யோசிக்காமல் உடனடியாக அருகில் இருந்த மரத்தின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆன்லைனில் பாடம் நடத்துகிறார்.

மரத்தில் உட்காருவதற்கு ஏதுவாக சில ஏற்பாடுகளை செய்து கொண்டு காலை 9.30 முதல் மாலை 6 மணி வரை அந்த மரத்திலேயே உட்கார்ந்து அவர் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அவர் கூறியதாவது;
மாணவர்களின் படிப்புக்காக தான் இவ்வாறு செய்வதாகவும் தனது வீட்டில் எந்த பகுதியிலும் இன்டர்நெட் கிடைக்கவில்லை என்பதால் மரத்தில் ஏறி உட்கார்ந்து தினமும் 8 மணி நேரத்திற்கும் மேலாக பாடம் நடத்துவதாகவும் அந்த ஆசிரியர் கூறியுள்ளார்.