வடக்கு மாகாண தொழில் முயற்சியாளர்கள் தற்போதுள்ள சூழ்நிலைக்கமைய தமது தொழில் முயற்சிகளை மாற்றியமைக்க முன்வர வேண்டும் என்று யாழ்ப்பாணம் தொழில்துறை மன்றத்தின் தலைவர் வி.கே. விக்னேஷ் கேட்டுள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
தற்போது உள்ள அசாதாரண சூழ்நிலையானது இலங்கையில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் வடக்கினை பொருத்தவரைக்கும் புதியதொழில் முயற்சியாளர்கள் தற்பொழுது உருவாகிக் கொண்டு வருகின்ற நிலையில் குறித்த அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர்களின் முயற்சிகளுக்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவே நாங்கள் கருதுகின்றோம்.

எனினும் அவ்வாறான முயற்சியாளர்கள் தற்போதைய சூழ்நிலையில் எவ்வாறான உற்பத்திகளை மேற்கொள்வதன் மூலம் தமது உற்பத்திகளை மக்கள் மத்தியில் சேர்ப்பிக்க முடியும் என்பதை ஆராய்ந்து செயற்பட வேண்டும்.
அத்தோடு தொழில் முயற்சிகளுக்காக பெறப்பட்ட கடன்களை செலுத்த வேண்டிய காலப் பகுதியையும் ஜனாதிபதி நீடிப்பு செய்திருப்பது நாங்கள் அறிந்ததே. அதேபோல் யாழ்ப்பாணத்திலுள்ள முயற்சியாளர்கள் தமது பதிவுகளை எமது மன்றத்தின் ஊடாக பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
ஏனெனில் அரசால் நஷ்ட ஈடு வழங்க படுமேயானால் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும் – என்றார்.






