கோப்பாயில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்: இராணுவம் எதேச்சதிகாரம் – கஜதீபன் காட்டம்

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் கொரோனாத் தொற்றுத் தடுப்பு தனிமைப்படுத்தல் முகாம் அமைக்கும் இராணுவத்தின் நடவடிக்கை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட நிறுத்தப்பட்டுள்ள இளம் வேட்பாளருமான ஆசிரியர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் இந்த நடவடிக்கை தமிழ் மக்கள் மத்தியில்; கொத்தளிப்பை ஏற்படுத்தியுள்ள அதேவேளை அரச படைகள் மீது வெறுப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது எனவும் தெரிவித்தார்.

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி பகுதியில் வசிக்கும் மக்களை (இன்று 27-04-2020) மாலை சென்று சந்தித்த கஜதீபன், அங்கு ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் கொரோனாத் தொற்றுத் தடுப்பு தனிமைப்படுத்தல் முகாம் அமைக்கும் இராணுவத்தின் நடவடிக்கை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இராணுவத்தின் இத்தகைய எதேச்சதிகாரப் போக்கு, ஏற்கனவே அரச படைகள் மீது தமிழ் மக்களுக்குள்ள வெறுப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

மக்கள் செறிந்துவாழும் பகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பெருமளவில் ஆசிரியர்களை உருவாக்கும் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் கொரோனா வைரஸ் தடுப்புத் தனிமைப்படுத்தல் முகாம் அமைக்கும் நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

வடக்கு கல்வித்துறை மீது நேரடித் தாக்கத்தைச் செலுத்தக் கூடிய இத்தகைய நடவடிக்கையை இராணுவத்தினர் உடனடியாக நிறுத்தி, தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வைப் போக்க வேண்டும்.
இதேவேளை, கொரோனாத் தொற்று தடுப்பு தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக எந்தவொரு பாடசாலைகளையும் பயன்படுத்தப்போவதில்லை என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா காலையில் கூறியிருந்தார்.

ஆனால், வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் மட்டும் ஏழு பாடசாலைகளை தனிமைப்படுத்தல் முகாம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாலையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் கூறுகின்றார்.

இவ்வாறு அரச மட்டத்தில் முரண்பாடான கருத்துக்கள், நிலைப்பாடுகள் வெளியிடப்பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் பெரும் குழப்ப நிலையைத் தோற்றிவித்துள்ளது.
எனவே, கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் மக்களை இராணுவம் மூலம் அடக்கி ஒடுக்க நினைக்காது அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.