இணுவில் – மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் சில மாதங்கள் தங்கியிருந்த ஆணும் பெண்ணும் தமது சிசுவை மண்ணுக்குள் புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்ணின் கருவிலிருந்த சிசுவை குறை மாதத்தில் நாவாலியைச் சேர்ந்த வைத்தியர் ஒருவரால் அகற்றப்பட்டுள்ளது. அந்த சிசுவை அவர்கள் விடுதியின் முற்றத்தில் வெட்டிப் புதைத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகரின் கீழான சிறப்புப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு நேற்று மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் இணுவில் – மருதனார்மடத்தில் உள்ள விநாயகர் விடுதிக்குச் சென்ற பொலிஸார், இருவரையும் கைது செய்தனர்.
கொக்குவிலையைச் சேர்ந்த 21 வயதுடைய பெண்ணும் உடுவிலைச் சேர்ந்த 20 வயதுடைய ஆணும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர். அவர்கள் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக அந்த விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.
இதன்போது பெண் கருவுற்று சில மாதங்களாகிய நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் நவாலியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரால் சட்டத்துக்குப் புறம்பான முறையில் சிசு அகற்றப்பட்டுள்ளது. அந்தச் சிசு விடுதியின் முற்றத்தில் புதைக்கப்பட்டுள்ளது.
சிசு புதைக்கப்பட்ட இடம் அடையாளம் காணப்பட்ட நிலையில், மல்லாகம் நீதிவானின் உத்தரவைப் பெற்று அதனை மீட்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
புதிய இணைப்பு
சிசுவை அகற்றிப் புதைத்த பெண், இளைஞனுக்கு விளக்கமறியல் – புதைத்தாக கூறப்பட்ட இடத்தில் எச்சங்கள் கிடைக்கவில்லை
இணுவில் – மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து சட்டத்துக்குப் புறம்பாக சிசுவை அகற்றி மண்ணில் புதைத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதனை அறிக்கையைப் பெற்று மன்றில் முன்வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார்.
அத்துடன், பெண்ணை வரும் மே 4ஆம் திகதிவரையும் அவருடன் தொடர்பிலிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை வரும் 11ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.
யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான சிறப்புப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் இணுவில் – மருதனார்மடத்தில் உள்ள விநாயகர் விடுதி நேற்றிரவு சோதனையிடப்பட்டது.
அதனையடுத்து கொக்குவிலையைச் சேர்ந்த 21 வயதுடைய பெண்ணும் உடுவிலைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக அந்த விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.
இதன்போது பெண் கருவுற்று சில மாதங்களாகிய நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் நவாலியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரால் சட்டத்துக்குப் புறம்பாக சிசு அகற்றப்பட்டுள்ளது. அந்தச் சிசு விடுதியின் முற்றத்தில் புதைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொலிஸாரால் அடையாளம் காட்டப்பட்ட இடம் இன்று மல்லாகம் நீதிவான் முன்னிலையில் தோண்டப்பட்டது. எனினும் அந்த இடத்தில் சிசுவின் எச்சங்கள் காணப்படவில்லை.
இந்த நிலையில் இளம் பெண்ணும் இளைஞனும் மல்லாகம் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
தான் கருவுற்ற நிலையில் மருத்துவரின் ஆலோசனையில் சிசுவை அகற்றியதாக பெண் ஏற்றுக்கொண்டமை தொடர்பில் பொலிஸார் மன்றுரைத்தனர்.
அதுதொடர்பில் பெண்ணை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதனை அறிக்கையைப் பெற்று மன்றில் முன்வைக்குமாறு மன்று கட்டளையிட்டது.
அதுவரை .பெண்ணை வரும் மே 4ஆம் திகதிவரையும் அவருடன் தொடர்பிலிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை வரும் 11ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.






