கணவர் வீட்டில் குடித்த விஷம்… தாய்வீட்டில் வந்து உயிரை விட்ட இளம்பெண்! நடந்தது என்ன?

இளம்பெண் ஒருவர் திருமணமான நான்கு ஆண்டுகளில் கணவர் வீட்டில் விஷம் குடித்துவிட்டு, தாய் வீட்டில் வந்து உயிரைவிட்டுள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ளது பல்லவராயன்பட்டி என்ற கிராமம். இங்கு வசித்து வரும் தம்பதி முருகன் – கண்ணகி. இவர்களுக்கு ராஜேஷ் என்ற மகனும், லாவண்யா என்ற மகளும் உள்ளனர்.

முருகன் கேரளாவில் உள்ள ஏல தோட்டத்தில் கூலி வேலை செய்கிறார். அதனால் மனைவியும், மகனும் இதே தொழிலை செய்து வருகின்றனர். லாவண்யாவுக்கு அதே ஊரை சேர்ந்த சதீஷ் என்பவருடன் திருமணமாகி உள்ளது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறான்.

தாய் வீட்டில் இருந்து லாவண்யா நகை, பணம் சீர்வரிசைக் கொண்டு வந்தும், கணவரும், அவரது குடும்பத்தாரும் கொடுமை செய்துள்ளனர்.

இந்நிலையில் கேரளாவில் தந்தைக்கு ஏழு தோட்டத்தில் ஒரு பங்கினை வாங்கி வருவதற்கு அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளனர். அவ்வப்போது தான் அனுபவிக்கும் சித்ரவதையை தனது தாயிடமும் கூறி வந்துள்ளார்.

நாளடைவில் கொடுமை அதிகரிக்கவே தனது கணவர் வீட்டருகில் இருந்த அரளிவிதையை அரைத்து குடித்துவிட்டு, தாய் வீட்டிற்கு வந்துள்ளார். வந்த நேரத்தில் இருந்து மகள் சோர்வாக இருப்பதை அறிந்த அவரது தாய் மகளை மருத்துவமனைக்கு அழைத்துள்ளார்.

எதுவும் கூறாமல் இருந்த லாவண்யா மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அவரை தூக்கிக்கொண்டு இரண்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர், சதீஷ் வீட்டினரிடம் இதை பற்றி கேட்கவும், அவர்கள் அலட்சியமாகவும், தரக்குறைவாகவும் பேசியுள்ள நிலையில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து, சதீஷ், அவரது அம்மா ராணி, அப்பா கோட்டைச்சாமி ஆகிய 3 பேரையும் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதோடு, ஜாமீனில் கூட வெளியே விடக்கூடாது என்று பெண் வீட்டார் கோட்டாட்சியரிடமும் மனு அளித்துள்ளனர்.

லாவண்யா உடலின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிசார் கூறியுள்ளனர்.