2020 ஏப்ரல் மாதம் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு கிடைக்கப்பெற்ற நிலையான நன்மை பெறுனர்கள் ஆவணம், முன்னுரிமை ஆவணம் மற்றும் கிராமிய குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட நன்மை பெறுனர்கள் ஆவணம் ஆகிய ஆவணங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள நன்மை பெறுனர்களுக்கு கொடுப்பனவுகள் வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கோரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் பணிப்புரையின் பேரில் வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு இரண்டாம் கட்டமாக வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்களின் வழிகாட்டலின் கீழ் குறித்த கிராம சேவையாளர்கள் நன்மை பெறுனர்களின் வீடுகளுக்கே சென்று கொடுப்பனவுகளை வழங்குவர்.
கொடுப்பனவு வழங்குதல் 2020 மே 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு மே 15ஆம் திகதி நிறைவுசெய்யப்படவுள்ளது.
பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்சவின் தலைமையில் இன்று (04) இடம்பெற்ற கலந்துரையாடலில் பின்வருமாறு கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டது.
முதியோர்களுக்கான கொடுப்பனவு
நூறு வயது நிறைவான முதியோர் கொடுப்பனவு – தேசிய முதியோர் செயலகத்தின் மூலம்
சிறப்புத் தேவையுடையோருக்கான கொடுப்பனவு
சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு – சிறப்புத் தேவையுடையோருக்கான தேசிய செயலகம்
விவசாயிகளுக்கான ஓய்வூதியம்
மீனவர்களுக்கான ஓய்வூதியம் – விவசாய காப்புறுதி சபையினால்
முதியோர்களுக்கான கொடுப்பனவு, நூறு வயது நிறைவான முதியோர்களுக்கான கொடுப்பனவு, சிறப்புத் தேவையுடையோருக்கான கொடுப்பனவு மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு வழங்குவதற்கு தேவையான நிதி ஏற்பாடுகள் பொருளாதார, கொள்கை அபிவிருத்தி அமைச்சினால் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் வழங்கப்படும்.
விவசாயிகளுக்கான ஓய்வூதியம் மற்றும் மீனவர்களுக்கான ஓய்வூதியம் உரித்துடைய நன்மை பெறுனர்களுக்கான கொடுப்பனவை வழங்குவதற்கு தேவையான நிதி ஏற்பாடுகளை பொருளாதார, கொள்கை அபிவிருத்தி அமைச்சினால் மகாவலி, விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது- என்றுள்ளது.






