மாவையின் கோரிக்கையினை அடுத்து சுமந்திரனை சந்தித்த மகிந்த! கூட்டமைப்பிடம் வழங்கிய உறுதி

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச, தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதி வழங்கியுள்ளார்.

இன்று காலை பிரதமரின் செயலாளருடன் தொடர்பு கொண்டு மாவை சேனாதிராஜா வழங்கிய தகவலின் அடிப்படையில் கூட்டமைப்பின் பேச்சாரள் எம்.ஏ.சுமந்திரனுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இது குறித்த உறுதியை வழங்கியுள்ளார்.

இது குறித்து கூட்டமைப்பு வெயியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த திங்கட்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் அரசியல் கைதிகள் தொடர்பான விபரங்களை பிரதமர் மகிந்த ராஜபக்ச, சுமந்திரனிடம் கேட்டறிந்ததோடு முழுமையான விபரங்களை தன்னிடம் சமர்ப்பிக்கும்படிக்கும் கேட்டிருந்தார்.

இதனடிப்படையில் தமிழ் அரசியலை கைதிகளின் முழுவிவரங்களும் முன்னாள் மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர் அம்பிகா சற்குணத்தின் பங்களிப்புடன் உறுதி செய்யப்பட்டு முழுமையான அறிக்கை ஒன்றினை சுமந்திரன் இன்று பிரதமரிடம் கையளித்தார்.

இந்த கைதிகளுள் வழக்குகள் முடிவிற்கு வந்தவர்கள் தொடர்பில் தான் ஜனாதிபதியுடன் பேசுவதாகவும் சுமந்திரனை ஜனாதிபதியுடன் நேரடியாக பேசுமாறும் கேட்டுக்கொண்ட பிரதமர், ஏனையோர் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் சுமந்திரனோடு கலந்துரையாடிய பிரதமர், தாம் புதிய அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்கும் பணிகளை முன்னெடுக்க உள்ளதாகவும் ஜனாதிபதி கொள்கை விளக்க உரையில் இதனை உறுதி செய்துள்ளதனையும் சுட்டிக்காட்டினார்.

புதிய நாடாளுமன்றம் கூடுகின்றபோது இது தொடர்பிலான நடவடிக்கைகளை தாம் ஆரம்பிக்கின்றபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இந்த முயற்சிகளிற்கு அத்தியாவசியமாகும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களை உள்ளடக்கி ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்கம் இடம்பெறுகின்றபோது அத்தகைய நடவடிக்கைகளிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு நிச்சயம் இருக்கும் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர், நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள தேசிய பிரச்சினைக்கான தீர்விற்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதன் அவசியத்தினையும் வலியுறுத்தினார்.

சுமார் ஒரு மணித்தியாலம் வரை நீடித்த இக்கலந்துரையாடலில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தாம் முன்னெடுப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்தார்- என்றுள்ளது.

இதேவேளை, இந்த சந்திப்பு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜவின் கோரிக்கையினை அடுத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை பிரதமரின் செயலாளருடன் தொடர்பு கொண்ட மாவை சேனாதிராஜா முக்கிய தகவலொன்றை தொலைநகல் ஊடாக அனுப்பி வைத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.