வவுனியாவில் 5000 ரூபா முதியோர் கொடுப்பனவில் மோசடி! அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு

வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவு ஒன்றில் 5000 ரூபா முதியோர் கொடுப்பனவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நாளைய தேசம் மக்கள் குறைகேள் அமைப்பினர் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினை கையளித்தனர்.

குறித்த கிராம சேவையாளர் பிரிவில் 5000 ரூபா முதியோர் கொடுப்பனவினை பெறுவதற்கு சென்ற சமயத்தில் கொடுப்பனவினை வழங்காது அந்த கொடுப்பனவினை இராணுவத்தினரிடம் அனுப்பியுள்ளேன், அங்கு சென்று பெற்றுக்கொள்ளுமாறு கிராம சேவையாளர் தெரிவித்தார்.

அதன் பின்னர் பாதிக்கப்பட்டவரின் பிரதேச செயலக கணக்காளரை வினவிய சமயத்தில் அப்பணம் பெறப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ஆனால் பயனாளிக்கு அக்கொடுப்பனவு கிடைக்கப்பெறவிலை.

எனவே இவ்விடயத்தில் மோசடி இடம்பெற்றுள்ளது. இதற்கு உரிய தீர்வினை பெற்றுத்தருமாறு நாளைய தேசம் மக்கள் குறைகேள் அமைப்பினர் அரசாங்க அதிபருக்கு வழங்கிய மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன அவர்களிடம் வினவிய போது,

குறித்த கிராம சேவையாளர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார்.