கோவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி ஒரு பில்லியன் ரூபாயைத் தாண்டியது

கோவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு சிறிலங்கா டெலிகொம் பீஎல்சி மற்றும் மொபிடெல் நிறுவனம் 50 மில்லியன் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளன.

அதற்கான காசோலைகள் சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் ரொஹான் பெர்னாண்டோவினால் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது.

மொபிடெல் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி நலின் பெரேரா உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை 50 மில்லியன் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளது. அதற்கான காசோலை ஜனாதிபதியி கையளிக்கப்பட்டது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி உள்ளிட்ட தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அதிகாரிகள் இதன் போது சமூகமளித்திருந்தனர்.
அத்துடன், உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சங்கம் 03 லட்சம் ரூபாயையும் கையளித்தது.

இன்று பிற்பகலாகும் போது கோவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி ஒரு பில்லியன் ரூபாயை கடந்திருந்தது.

இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார,சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும்.

சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.

0112354479/0112354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலே அவர்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ள முடியும் – என்றுள்ளது.