அமெரிக்காவில் யாழ் பல்கலை தமிழ் மாணவிக்கு கிடைத்த உயர்விருது

அமெரிக்காவில் கிளெம்சோன் பல்கலைக்கழகத்தில் 2019 வருடாந்த மேல் எழுந்து வரும் தலைவர்கள் விருதை வென்றுள்ளார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் பொறியியல் பிரிவில் 2018 ஆம் ஆண்டு முதல் வகுப்பில் சித்திபெற்ற தமிழ் மாணவி.

திருகோணமலை நகரைச்சேர்ந்த தர்சிகா விக்கினேஸ்வரன் என்ற மாணவிக்கே இந்த விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு யுத்தநிலைமையால் பல்கலைக்கழக கல்வியை மேற்கொள்வதற்கு முன்னர் அவர் தொடர்ச்சியாக நிச்சயமற்ற நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிட்டது.

எனினும் அவர் யாழ்.பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றபோது அவரது அறிவுக்கூர்மை வெளிச்சத்திற்கு வந்தது.

வட இலங்கையில் பொறியியல் பீடத்துக்குச் சென்றபோது தர்சிகாவின் திறமையை சவுத் கரோலினாவிலுள்ள கிளெம்சோன் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் அவதானித்துள்ளார்.

கல்வியில் திறமைசாலியாக விளங்கிய தர்சிகா ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.அவர் அமெரிக்காவில் உயர் கல்வியைத் தொடர்வதற்கான ஏற்பாடுகளை இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் நடராஜா ரவிச்சந்திரன் மேற்கொண்டிருந்தார்.

கிளென் திணைக்களத்தில் விஞ்ஞான முதுமாணி பட்டத்தைப் பெற்றிருக்கும் தரசிகா, புவித்தொழில்நுட்பப் பொறியியல் கல்வியைப் பூர்த்தி செய்துள்ளார்.

பேராசிரியராக வரும் நம்பிக்கையுடன் அவர் கலாநிதி பட்டக்கல்வியைத் தொடரவுள்ளார்.