நண்பனின் தம்பியைக் காப்பாற்ற சென்ற இளைஞர்… பரிதாபமாக பலியான சோகம்

முன்விரோதம் காரணமாக இருவரை அரிவாளால் தாக்கப்பட்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மயிலாடுதுறை மணக்குடி செட்டித்தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் முத்தழகன்( வயது 23). இவரது சகோதரர் கட்டபொம்மனுக்கும் சேந்தங்குடியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

நேற்றைய முன்தினம் மயிலாடுதுறை பாலாஜி நகரில் கட்டபொம்மனுக்கும் சுரேசுக்கும் ஏற்பட்ட தகராறில் கட்டபொம்மனின் இருசக்கர வாகனத்தை சுரேஷ், சசிகுமார், முத்துப்பாண்டி, மணிகண்டன் ஆகியோர் பிடுங்கி வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அண்ணன் முத்தழகன் மயிலாடுதுறை தருமபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த குமார் மகன் சிவராஜ் (வயது 19) என்பவரை துணைக்கு அழைத்துக்கொண்டு கட்டபொம்மன் இருசக்கர வாகனத்தை திருப்பி கேட்பதற்காக நேற்றிரவு மயிலாடுதுறை பாலாஜி நகருக்கு சென்றுள்ளார்.

அப்போது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, முத்தழகனையும், சிவராஜையும் கத்தி, இரும்பு பைப் மற்றும் உருட்டுக்கட்டைகளைக் கொண்டு கொடூரமாக தாக்கியுள்ளனர். சுதாரித்துக் கொண்ட கட்டபொம்மன் தப்பியோடினார்.

படுகாயம் அடைந்த முத்தழகன், சிவராஜ் இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிவராஜ் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

முத்தழகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, போலீசார் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கீழ நாஞ்சில் நாட்டை சேர்ந்த சசிகுமார் என்பவரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த சிவராஜ் ஆந்திராவில் சிற்பத்தொழில் பார்த்து வந்தவர் ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் ஆந்திராவில் இருந்து நடந்தே மயிலாடுதுறைக்கு வந்தடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.