பிரசவத்துக்கு பின்னரும் வயிற்று வலியால் துடிதுடித்த பெண்.. மருத்துவ சோதனையில் காத்திருந்த பேரதிர்ச்சி..!

தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியை சேர்ந்தவர் வாஞ்சிநாதன். இவரது மனைவி முத்துச்செல்வி. இவர் கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில், கடந்த மாதம் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தனது மனைவியை அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்ற நிலையில், வழியிலேயே குழந்தை பிறந்துள்ளது. இதன் பின்னர், ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொப்புள் கொடியை அகற்றி, கருப்பையை சுத்தம் செய்து, மேல் சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் காஞ்சனா பரிந்துரை செய்துள்ளார்.

இதன்படி, தம்பதிகள் கம்பம் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டு இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், வீட்டிற்கு திரும்பிய நாட்களில் இருந்து முத்துசெல்விக்கு அடிவயிற்று பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கடந்த 15 ஆம் தேதி அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யவே, மருத்துவமனையில் முத்துசெல்விக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சோதனையில், முத்துசெல்வியின் வயிற்றில் கையளவு பஞ்சு இருந்துள்ளது. இதனை தனியார் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய நிலையில், மனைவியின் வயிற்றில் பஞ்சை வைத்து தைத்த மருத்துவர் காஞ்சனாவின் மீது நடவடிக்கை எடுக்க கூறி வாஞ்சிநாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.