நாட்டில் அடையாளம் காணப்பட்ட 29 தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

அம்பாறை மாவட்டம் ஒலுவில் துறைமுக பகுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த மேலும் 29 கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (19) மாலை இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜாஎல பிரதேசத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட 80 கடற்படையினர் ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இதில் ஏலவே 10 கடற்படையினர் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வெலிகந்தை வைத்தியசாலை மற்றும் கொழும்புக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் தனிமைப்படுத்தல் முகாமில் வைக்கப்பட்டுள்ள ஏனைய 70 கடற்படையினரின் மருத்துவ மாதிரிகள் பெறப்பட்டு இன்று (19) பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதனை தொடர்ந்து 29 கடற்படையினர் கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதியாகியுள்ளதுடன் அவர்கள் தற்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 29 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1021 ஐ எட்டியுள்ளது.

569 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 442 நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.