ராகு கேது பெயர்ச்சி 2020…. உங்கள் ராசிக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும்? ராஜயோகம் பெறும் ராசியினர் இவங்கதான்…

உலகமே கொரோனா வைரஸ் என்ற கொடிய நோயிடம் சிக்கி கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியும். இந்த வைரஸ் பரவ காரணம் ராகு தான் என்று சொல்லப்படுகிறது. கேது என்ற நிழல் கிரகத்தின் சஞ்சாரம் பலருக்கும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

இந்த ஆண்டு கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி கேது பெயர்ச்சி செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறப்போகிறது.

இந்த பெயர்ச்சியால் தற்போது தனுசு ராசியில் உள்ள கேது பகவான் விருச்சிகம் ராசிக்கு நகர்கிறார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும், பலம் பெற்றவர்கள்.

ராகுவும் கேது ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். விருச்சிகம் செவ்வாய் வீடு என்பதால் கேது செவ்வாயை போல செப்டம்பர் மாதம் முதல் பலனை கொடுக்கப் போகின்றனர்.

மனித தலையும் பாம்பு உடலும் கொண்டவர் ராகு, பாம்பு தலையும் மனித உடலும் கொண்டவர் கேது. இருவருக்கும் உயிர் ஒன்றுதான். இருவரும் நேர் எதிர்திசையில் நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிக்கின்றனர்.

கேதுவின் அதிதேவதை சித்ரகுப்தர், தானியம் கொள்ளு, நவரத்தினம் வைடூர்யம், வஸ்திரம் பலவண்ணம், புஷ்பம் செவ்வல்லி,சமித்து தர்ப்பை, கிழமை ஞாயிறு, ராசியில் தங்கும் காலம் 18மாதம், திசை வடமேற்கு.

மேஷம்
கொரோனா வைரஸ் பாதிப்பு உங்களின் பொருளாதார நிலையை முடக்கிப் போட்டிருக்கும் நிலையில் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் அமரப்போகும் கேது பகவான் உங்கள் உடல் நிலையில் சிரமத்தை ஏற்படுத்துவார்.

உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாட்டினை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். கடன் கொடுக்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்வது நல்லது. தினசரியும் விநாயகர் அகவல் படிக்க பாதிப்புகள் நீங்கும்.

ரிஷபம்
ஏழாம் இடத்தில் அமர்ந்து உள்ள கேதுவினால் சத்ரு நாசம் ஏற்படும். எதிரிகள் காணாமல் போவார்கள். புதிய நபர்களை நம்பி எந்த விஷயத்திலும் இறங்கக் வேண்டாம்.

பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரும். பிரச்சினைகள் தீர விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வணங்குங்கள்.

மிதுனம்
ஆறாம் இட கேதுவினால் நன்மைகள் அதிகம் நடைபெறும். பண விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணத்தை யோசித்து முதலீடு செய்யுங்கள். பத்திரமான இடத்தில் பணத்தை சேமிப்பது நன்மை தரும். உடல் ஆரோக்கியம் பெறும்.

கேது பகவான் எதிரிகளை துவம்சம் செய்து விடுவார். கடன் பிரச்னைகள் குறையும். பொறுமையுடன் இருந்தால் நன்மைகள் அதிகம் நடைபெறும். செவ்வாய்கிழமைகளில் விநாயகரை வெற்றிலை மாலை சாற்றி வணங்குங்கள்.

கடகம்
கேது பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் அமர்ந்து பல நன்மைகளை செய்யப் போகிறார். மனதில் நினைத்ததை செயல்படுத்துவதில் வேகம் காட்டுவீர்கள். மனதில் நற்சிந்தனைகளையும், நல்லெண்ணங்களையும் கேது அருள்வார்.

கேதுவினால் எல்லா விஷயங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறைக் காட்டுங்கள். சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை அருகம்புல் மாலை சாற்றி வணங்குங்கள்

சிம்மம்
நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் அமரும் கேது பகவான் சொத்து, சுகத்தை கொடுப்பார். உங்க வாழ்க்கை தரம் உயர்வடையும். நீங்கள் எடுக்க போகும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அம்மாவின் உடல் நலனில் அக்கறைக் காட்டுங்கள்.

வேலையில் முன்னேற்றமும், ஊதிய உயர்வும் கிடைக்கும். முன்கோபத்தை குறையுங்கள். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலில் விளக்கேற்றி வழிபடுங்கள்.

கன்னி
கேது முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். உடன்பிறந்தோருடன் சிறு சலசலப்பை ஏற்படுத்துவார். குடும்பத்தில் சுப காரியங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். மறைமுக எதிரிகள் தொல்லை தீரும்.

பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். புதிய சொத்துக்கள் வாங்க முயற்சி செய்யலாம். விலகியிருந்த உறவினர்கள் நெருங்கி வருவார்கள். செவ்வாய்கிழமைகளில் விநாயகரை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

துலாம்
துலாம் ராசிக்கு கேது பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் அமர்வதால் எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

அநாவசிய பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். வீண் வாக்குவாதத்தைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். குடும்ப பிரச்சினைகளை யாருக்கும் சொல்ல வேண்டாம்.

விருச்சிகம்
கேது பகவான் உங்க ஜென்ம ராசியில் அமர்வதால் விரக்தியான மனநிலை ஏற்படும் என்றாலும் கவலைப்படாமல் செய்யும் வேலையில் கவனம் செலுத்துங்கள். உடல் நிலை பாதிப்புகள் வந்து போகும். ஞாயிறன்று பிரத்யங்கிரா தேவியை வணங்குங்கள். காகத்திற்கு எள் சாதம் வைப்பது நல்லது.

தனுசு
தனுசு ராசிக்கு ஜென்மத்தில் இருந்த கேது விரைய ஸ்தானத்திற்கு மாறுவதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். பிள்ளைகளுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு கை கூடி வரும். நல்ல வேலையும் உத்யோகத்தில் சம்பளம், பதவி உயர்வும் கூடி வரும்.

மகரம்
கேது பகவான் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் அமர்வதால் பொருளாதார நிலை உயரும். சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கும். ஆன்மீக விசயங்களுக்காக அதிக செலவுகளை செய்வீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் அதிகரிக்கும்.

அலுவலக விசயமாக வெளிநாடு பயணம் செல்வீர்கள். புதிதாக சிலருக்கு வெளிநாடு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. கேதுவினால் பண வரவு அதிகரிக்கும்.

கும்பம்
கும்பம் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் கேது பகவான் சஞ்சரிப்பதால் வேலை தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சிலர் புதிய வீடு மாறுவீர்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.

பொறுமையோடு இருந்தால் இழப்பை சரி செய்யலாம். இழந்த செல்வாக்கை திரும்ப பெறுவீர்கள். உங்களின் பொருளாதார நிலை சீரடையும்.

மீனம்
மீனம் ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் அமர உள்ள கேதுவினால் நீங்கள் நினைத்தது நிறைவேறும். உங்க வாழ்க்கையில் மன நிம்மதியையும் சந்தோஷத்தையும் கேது கொடுப்பார்.

சில நேரங்களில் நீங்கள் விரும்பியது கிடைக்காவிட்டாலும், கிடைத்ததை விரும்பினால் வெற்றி நிச்சயம். ஆன்மீக யாத்திரை அல்லது கோவிலுக்கு குடும்பத்துடன் பயணமாகச் செல்வீர்கள்.