ஸ்ரீலங்காவில் உயிரிழந்த நபர் மீண்டும் உயிருடன் வந்ததால் பரபரப்பு

மீகொட-முத்துஹெனாவத்த பகுதியில் வாகன விபத்தொன்றில் உயிரிழந்ததாக கருதப்பட்ட நபர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

79 வயதான 6 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு திரும்பி வந்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

இவர் வெல்லம்பிடிய பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தொழில் செய்து வந்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீடு செல்ல முடியாமல் குறித்த நபர் தொழிற்சாலையிலேயே தங்கியிருந்தார்.

இதற்கிடையில் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி அத்துருகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் மீகொட-முத்துஹெனாவத்த பகுதியை சேர்ந்த குறித்த நபரை போன்ற தோற்றம் கொண்டவர் என கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் 79 வயதுடைய குறித்த நபரின் பிள்ளகைள் உயிரிழந்தவர் தனது தந்தை என காவல் துறையினரிடம் உருதிப்படுத்தி சடலத்தை எடுத்துச் சென்று இரண்டு நாட்களின் பின்னர் அடக்கம் செய்துள்ளனர்.

தொடர்ந்து தொழிற்சாலையில் தங்கியிருந்த 79 வயதான நபர் ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் தனது சொந்த வீட்டுக்கு வந்துள்ளார்.

உயிரிழந்தவர் உயிருடன் திரும்பி வருகின்றார் என அவரை கண்ட பிரதேசவாசிகள் அச்சம் கொண்டு பொலிஸில் முறையிட்டுள்ளனர்.

பின்னர் பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து இவர் உண்மையில் 6 பிள்ளைகளின் தந்தையான குறித்த பகுதியை சேர்ந்தவர் என்பதும் அத்துருகிரிய பகுதியில் உயிரிழந்தவர் இவரை போன்ற உருவம் கொண்ட வேறு ஒரு நபர் எனவும் அடையாளப்படுத்தப்பட்டது.