தந்தையை 1200 கிமீ தூரம் சைக்கிளில் வைத்து அழைத்துச்சென்ற 15 வயது சிறுமிக்கு அடித்த அதிர்ஷடம்

பீகார் மாநிலத்தை சேர்ந்த மோகன் பஸ்வான் என்பவர் ஹரியானா மாநிலம் கூர்கானில் ரிக்‌ஷா ஓட்டி வருகிறார்.

இவருக்கு 5 குழந்தைகள். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் பீகாரில் இருக்க, மோகன் மட்டும் தனியாக ஹரியானாவில் பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட ஒரு விபத்தில் மோகனால் நடக்க இயலாமல் போயுள்ளது. இதனையடுத்து கூர்கான் சென்ற அவரது மகள் ஜோதி குமார், தந்தைக்கு உதவிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மோகன் பஸ்வான் மற்றும் ஜோதி குமாரி உணவின்றி தவித்து வந்துள்ளனர். அவர்களின் வீட்டு உரிமையாளரும் இவர்களை வெளியேற்றப் போவதாக அச்சுறுத்தி உள்ளார்.

இதனால் என்னசெய்வதென்று தெரியாத ஜோதி, நடக்க இயலாத தனது தந்தையை சைக்கிளில் வைத்து சொந்த ஊரை நோக்கி பயணித்துள்ளார்.

இவர்கள் பீகாரை நோக்கி 1,200 கிமீ தூரம் சைக்கிளில் பயணம் செய்துள்ளனர். நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 கிமீ வரை பயணம் செய்த இவர்கள் பீகாரை அடையும் வரை பாதி வேலை உணவு மட்டுமே உண்டுள்ளனர். வழியில் லாரி ஓட்டுநர்களும் அவர்கள் பயணிக்க உதவியதால், 7 நாட்களில் ஜோதி குமாரியும் அவரது தந்தையும் சொந்த ஊரை அடைந்துள்ளனர்.

15 வயது சிறுமி தனது தந்தையை அமரவைத்து 1,200 கிமீ தூரம் சைக்கிள் ஓட்டியிருப்பதை அறிந்து ஆச்சரியமடைந்த இந்திய சைக்கிள் ஓட்டுநர்களின் கூட்டமைப்பு ( Indian Cycling Federation) அடுத்த மாதம் நடைபெறவுள்ள போட்டியில் கலந்து கொள்ள ஜோதி குமாரிக்கு அழைப்பு விடுக்கலாம் என முடிவெடுத்துள்ளது. இது அவரது வாழ்கையில் ஒரு திருப்புமுனையாக அமையும் என கருதப்படுகிறது.

இதனிடையே ஜோதியின் குடும்ப நிலையை அறிந்த சில ராணுவ வீரர்கள் அவருக்கு ரூ.5,000 பண உதவி உதவியளித்துள்ளனர்.

மேலும் உயர் அதிகாரி ஒருவர் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஜோதியை பள்ளியில் சேர்க்கவும், அவரது குடும்பத்தின் நிதி நெருக்கடியை போக்கவும் அரசு உதவிபுரியும் என தெரிவித்துள்ளார்.