காஞ்சிரங்குடா இராணுவ முகாமிலிருந்து இறந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்று கிடையாது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் அறிவித்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி அம்பாறை மாவட்டம் காஞ்சிரங்குடா இராணுவ முகாமிலில் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக ஒரு இராணுவ வீரரின் உடலை திருக்கோயில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வந்திருந்தார்கள்.
வைத்தியசாலைக்கு கொண்டு வந்த தருணத்தில் மூச்சுவிட சிரமப்பட்டு வைத்தியசாலைக்கு இறந்த நிலையில் கொண்டுவரப்பட்டுள்ளார்.
எனினும் உண்மையில் அந்த இராணுவ வீரருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டு மரணம் சம்பவித்திருக்கலாம் என எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அந்த இராணுவ வீரரின் உடலை மிகவும் பாதுகாப்பான முறையில் பத்திரப்படுத்தி மருத்துவ ஆய்விற்காக மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருந்தோம்.
இதன் பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றுள்ளன.
அந்த அறிக்கையின் அடிப்படையில் இறந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு காணப்பட்ட பதற்ற நிலைமைக்கு தெளிவு பிறந்திருக்கிறது.
மேலும் இறந்த இராணுவ வீரர் கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த காலங்களில் சேவையாற்றியவர் எனவும் அதற்காக அவருக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டார்.






