கிணற்றுக்குள் அடுத்தடுத்து மீட்கப்பட்ட 9 சடலங்கள்… கொலை நடந்தது எப்படி?… காரணம் இதோ

மேற்கு வங்கம் மற்றும் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர் மற்றும் குடும்பங்கள் என மொத்தம் 9 பேர் தெலுங்கானாவில் பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த நிகழ்வு கொலை என்றும் அதற்கான காரணமும் தற்போது வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் சுரேஷ் என்பவரின் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மசூத் என்பவர் குடும்பத்துடன் காணாமல் சென்றுள்ளதாக தொழிற்சாலை முதலாளி பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலை தொழிற்சாலை அருகே உள்ள கிணற்றில் சில சடலங்கள் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது. அங்கு சென்று 4 சடலங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

விசாரணையில் அவர்கள் தொழிற்சாலையில் பணிபுரிந்த மசூத், அவரது மனைவி நிஷா, கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த அவரது மகள் புஸ்ரா(22), அவரது மூன்று வயது மகன் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் வெள்ளிக்கிழமை அதே கிணற்றில் 5 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதில் மசூத் மகன் சபாக், பீகாரை சேர்ந்த தொழிலாளிகள் ஸ்ரீராம், ஷாம், திரிபுராவை சேர்ந்த ஷகீல் அகமது ஆகியோரின் உடல்களை கைப்பற்றியுள்ளனர்.

பாழடைந்த ஒரே கிணற்றில் இருந்து அடுத்தடுத்து 9 சடலங்கள் கைப்பற்றப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது கொலையாக இருக்கலாம் என்று பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

அதன்படி, கிணற்றில் சடலம் கண்டெடுக்கப்பட்டதன் முதல் நாள், மசூத்தின் மகனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு சஞ்சய் குமார் ஷா என்ற பீகாரைச் சேர்ந்தவர் வந்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரைத் தேடி விசாரணை நடத்தியதில் சஞ்சய் உட்பட 4 பேர் இந்த கொலையை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

மசூத்தின் மகளான புர்ஷாவுக்கு ஏற்கனவே திருமணமாகி, கணவரைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், சஞ்சய்யுடன் தொடர்பு இருந்ததும், நாளடைவில் அது துண்டிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இதனால் மசூத் குடும்பத்தினர் மீது சஞ்சய் குமார் வன்மம் கொண்டுள்ளதையடுத்து, குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்ய தனது நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி, பிறந்தநாள் நிகழ்ச்சியில் விஷம் கலந்த குளர்பானத்தை 9 பேருக்கும் கொடுக்க, அதனைக் குடித்த அவர்கள் மயங்கி சரிந்துள்ளனர். பின்னர், உடல்களைக் தூக்கி அருகில் உள்ள கிணற்றில் போட்டுள்ளனர்.

உண்மை வெளியே தெரியவந்துள்ள நிலையில், சஞ்சய் குமார் ஷா உள்ளிட்ட நால்வரும் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.