நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை – யாழில் யுவதி தற்கொலை

தென்னிந்திய சின்னத்திரை நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை என்ற மன விரக்தியில் இளம் யுவதி ஒருவர் தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் கொட்டைக் காடு மல்லாகம் பகுதியை சேர்ந்த 26 வயதான இளம் யுவதியே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மல்லாகம் பகுதியில் வசித்து வரும் குறித்த யுவதி கடந்த ஒரு மாதமாக தென்னிந்திய சின்னத்திரை நடிகை ஐஸா என்பவரை பார்ப்பதற்கு தன்னை இந்தியா அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார்.

எனினும் பெற்றோர்கள் கொரோனா வைரஸ் காரணமாக நிலவும் நெருக்கடியில் தற்போது செல்ல முடியாது பின்னர் அழைத்து செல்வதாக கூறி வந்துள்ளனர்.

இந்நிலையில் தன்னை கூட்டி செல்வதாக தொடர்ந்தும் ஏமாற்றுவதாக கூறி நேற்று வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துள்ளார்.

தீக்காயத்திற்கு உள்ளான யுவதியை உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு குறித்த யுவதி மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த இறப்பு தொடர்பாக மேலதிக விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டுள்ளார்.