ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் நாட்டின் பொருளாதாரத்தை மீள் கட்டியெழுப்புவதற்கும் ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல்களில்,

தற்போதைய கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நீண்டகாலமாக அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை முதன்முறையாக நாளை(26)(இன்று) முதல் தளர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னரும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை இல்லாதொழிப்பதற்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் ஒத்துழைக்குமாறு நான் உங்களை அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.

என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தீவின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று அதிகாலை 5 மணி முதல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு மற்றும் கம்பாஹா மாவட்டங்களில் 66 நாட்களுக்குப் பின் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.