சுடுகாட்டுக்கு பதறி ஓடிய தாய்.. கதறியபடியே மகனுக்கு கொள்ளி வைத்து எரித்த அவலம்..!

சாதியை காரணம் காட்டி, தகன மேடையில் இளைஞரின் பிணத்தை எரிக்க மாற்று சமூகத்தினர் விடவில்லை.. அதனால் கீழேயே வைத்து உடலை எரித்துள்ளனர்.. அந்த சடலம் பாதி வெந்தும், வேகாததுமாக தகவல் கிடைக்கவும், பெற்ற தாய் சுடுகாட்டுக்கு ஓடியுள்ளார்.. பாதி எரிந்த நிலையில் கிடந்த மகனின் சடலத்துக்கு தானே கதறி அழுதபடி கொள்ளி வைத்துள்ள அதிர்ச்சி சம்பவம் நம் தமிழகத்தில் நடந்துள்ளது.

அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியை சேர்ந்தவர் கற்பககுமார்.. இவர் தஞ்சாவூரில் சலூன் கடை நடத்தி வருகிறார்.. சமீப காலமாக சலூன்கடைகளுக்கு ஊரடங்கு காரணமாக அனுமதி இல்லை.

கற்பககுமார், மற்ற இடங்களில் மூடப்பட்டுள்ள கடைகளை பார்க்க சென்றபோது, எதிர்பாராதவிதமாக லாரி விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். அதனால் இவரை அடக்கம் செய்வதற்காக பொது சுடுகாட்டின் தகன மேடையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் மாற்று சமூகத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆவேசம் ஆனார்கள்… தகன மேடையில் எரிக்க வைக்கப்பட்டிருந்த விறகுக்கட்டையை தூக்கி வீசியெறிந்தனர். இதனால் கீழப்பழுவூர் போலீஸுக்கு விஷயம் தெரிவிக்கப்படவும், அவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் இளைஞரை தகன மேடையில் எரிக்க யாரும் ஒப்புக் கொள்ளவில்லை… விஷயத்தை பெரிதாக்க வேண்டாம் என்று பாதிக்கப்பட்டவர்களைதான் சமாதானம் செய்தனர்.

“இன்னைக்கு உங்களை விட்டா, நாளைக்கு இன்னொருத்தங்க வருவாங்க.. அப்பறம் உங்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம்” என்று மாற்று சமூகத்தினர் கேட்டதாகவும் கூறப்படுகிறது.. அதனால் உறவினர்கள் தகன மேடையில் பிணத்தை எரிக்காமல், கீழேயே வைத்து அவசரமாக உடலை எரித்துவிட்டு வந்துவிட்டனர்.

மறுநாள் அந்த பிணம் பாதி எரிந்து, பாதி எரியாத நிலையில் கிடப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் சென்றது. இதை கேட்டதும், இளைஞரின் தாய் கொதித்தெழுந்தார்.. பெண்கள் சுடுகாட்டுக்கு வரக்கூடாது என்பதையும் மீறி பாதி உடல் மட்டுமே எரிந்த நிலையில் கிடந்த மகனை கண்டு கதறினார்.. அங்கேயே புரண்டு அழுதார்.. மீதி உடலை பெற்ற தாயே எரித்துள்ளார்.

இந்த சம்பவம் பற்றி அந்த தாய் சொல்லும்போது, “உடலை எரிப்பதற்காக அடுக்கி வெச்ச விறகுக்கட்டைகளை தூக்கி வீசினார்கள்.. அதை தட்டி கேட்க போனால், அந்த விறகுக்கட்டையாலேயே அடிக்க வந்துள்ளனர்.. இது அரசு சுடுகாடுதானே.. எல்லாருக்கும் பொதுதானே என்று கேட்டதற்கு, சாதியை சொல்லி கெட்ட வார்த்தைகளில் திட்டி உள்ளனர்.. போலீசுக்கு போயும் பிரயோஜனம் இல்லை.. அப்பறம்தான் கீழே வெச்சு எரிச்சிருக்காங்க.

மறுநாள் என் மகன் உடம்பு பாதி தான் எரிச்சிருக்குன்னு சொன்னதும் நான் சுடுகாட்டிற்கு ஓடினேன்… என்னை நிறைய பேர் போக வேணாம்னு தடுத்தும், மனசு கேக்கல.. அழுதுகொண்டே என் மகனுக்கு கொள்ளி வெச்சேன்.. என் நிலைமை யாருக்குமே வரக்கூடாது” என்றார். “எரிக்கிறதனால சாதி அந்தஸ்து குறைஞ்சிடுமா என்று இந்த தாய் கேட்ட கேள்விக்கு இதுவரை யாரிடமிருந்தும் பதில் இல்லை.