யாழ். வடமராட்சியில் பொலிஸாரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல்

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அண்மையாக வீதியில்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் நடதப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் உள்ள முச்சந்தியில் இடம்பெற்றது.

வடமராட்சி கிழக்கில் பொலிஸாருக்கு இலக்கு வைத்து நீர் விநியோகக் குழாய்க்கு பயன்படுத்தப்படும் என்கப்கள், சி4, சைக்கிள் போல்ஸ், டெட்னேட்டர் மற்றும் பற்றிகள் என்பவற்றைப் பயன்படுத்தி சக்தி குறைந்த கிளைமோர் குண்டு தயாரிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரை அச்சுறுத்தும் வகையில் இந்த திட்டம் தீட்டப்பட்டிப்பதாக நம்பப்படுகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

வடமராட்சி கிழக்கில் இடம்பெறும் மணல் கடத்தல்களை தடுக்கும் நோக்குடன் வடமராட்சி கிழக்கு முச்சந்திப் பகுதியில் பொலிஸார் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு வருவதுடன், அந்தச் சந்தி பகுதியில் உள்ள ஆலடிக்கட்டில் அமர்ந்திருந்து அந்த வீதியால் பயணிக்கும் டிப்பர்களின் அனுமதிப்பத்திரம் சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவது வழமையாகும்.

இந்நிலையில் இன்றைய தினமும் வழமையான வீதி சோதனை நடவடிக்கைக்காக குறித்த சந்திப்பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கடமையில் ஈடுபட்டனர்.

அவர்களில் ஒருவரின் காலில் மிதிபட்டதில் மண்ணுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு கிளைமோர் வெடித்துள்ளது. அதன்போது பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார்.

மணல் கடத்தல்காரர்களால் பொலிஸாரை இலக்குவைத்து இந்த கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.