யாழ்ப்பாணத்தில் ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள் கண்காணிக்கப்படும்; கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை – பொலிஸ்

“உணவகங்கள், நட்சத்திர விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் திறப்பதற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனினும் சுகாதார நடைமுறையை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்படும்” என்று மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனாரட்ன தெரிவித்தார்.

நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் முகமாக நாட்டில் இரண்டு மாதங்களாக ஊரடங்குச் சட்டம் நடைமுறை படுத்தப்பட்டு மீண்டும் நாடு படிப்படியாக வழமைக்குத் திரும்பிவந்தது. நேற்றைய தினத்தில் இருந்து நாடு முழுவதும் கட்டுப்பாடுகளுடன் வழமைக்குத் திரும்பியுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டமும் வழமைக்குத் திரும்பியுள்ளதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இதனடிப்படையில் பலரின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்கள், நட்சத்திர விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் போன்றவை புதிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொலிஸார் அறிவுறுத்தலுக்கு அமைய திறக்கப்பட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளோம்.

எனவே இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்களுக்கு அமைய தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதாவது தமது நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் கட்டாயமாக முகக்கவசம் மற்றும் கையுறைகளையும் கட்டாயமாக அணிய வேண்டும்.

சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்றி சமூக இடைவெளியிணையும் பேணியே பொது மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.

இந்த நிறுவனங்கள் பொலிஸாரினால் கண்காணிக்கப்படும் போது எவராயினும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதவிடத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த எடுப்படும் – என்றார்.

ஏனைய மாவட்டங்களை போலவே எமது யாழ்ப்பாண மாவட்டத்திலும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு பொலிஸாரினால் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே மக்களும் பொலிஸாருக்கு உரிய ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுகொண்டார்.