தாய் இறந்தது தெரியாமல் பச்சிளம் குழந்தை செய்த செயல்!… பார்ப்போரின் கண்களை குளமாக்கும் காட்சிகள்

இந்தியாவில் தொடரும் ஊரடங்கு உத்தரவால் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்.

எனவே சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்களுக்காக சில தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு.

மேலும் வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை மீட்கச் சிறப்பு ரயில்களை இயக்க தொடங்கியது. அதனால் பல லட்சக் கணக்கான மக்கள் அந்த ரயில்களில் தங்களின் சொந்த பகுதிக்குத் திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வெளியாகியுள்ள அந்த வீடியோவில் குழந்தை ஒன்று ரயிலே ப்ளாட் ஃபாரத்தில் போர்வையால் மூடப்பட்டுள்ள ஒருவரைப் பலமுறை விடாமல் எழுப்ப முயல்கிறது.

ஆனால் அந்தக் குழந்தை எவ்வளவு முயன்றும் அந்தப் போர்வைக்குள் இருப்பவர் எழவே இல்லை. மேலும் அசைவுகளும் இல்லை.

இந்த வீடியோ குறித்த செய்திக் குறிப்பை என்.டி.டிவி செய்தி தளம் வெளியிட்டுள்ளது. அந்தப் போர்வைக்குள் இருப்பவர் அந்தக் குழந்தையின் தாய் என்பதும், அவர் ஒரு புலம்பெயர் தொழிலாளி என்பதும் விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த வீடியோ முசாபர்பூரில் உள்ள ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்டதும், திங்கட்கிழமை சிறப்பு ரயில் மூலம் அப்பெண் குழந்தைகளுடன் பீகார் வந்ததும் தெரியவந்துள்ளது.

கடுமையான வெயில், போதிய உணவின்மை காரணமாக அப்பெண்ணின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து இறந்துவிட்டதாக ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

அவர் இறந்த பின்னர் அக்குடும்பத்தினர் முசாபர்பூர் நிலையத்தில் இறங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர் என்றும் கூறியுள்ளது.

மேலும் இறந்து போன அந்தப் பெண் தனது சகோதரி, சகோதரியின் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கதிஹார் சென்று கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.