காணாமல்போய் 23 நாளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட யுவதியின் மண்டையோடு! விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

வெல்லவாய, குடாஓயா பொலிஸ் பிரிவில் காணாமல் போயிருந்த யுவதி 23 நாளின் பின்னர் காட்டுப்பகுதியில் இருந்து எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளார்.

இதன்போது அவரது மண்டையோடு, தோள்ப்பை என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் யுவதியை கொலையை செய்த குற்றச்சாட்டில் அவரது சகோதரி மற்றும் கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தெலுல்ல பகுதியை சேர்ந்த 21 வயதான குறித்த யுவதி கடந்த 5ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் அது குறித்து ஊவா குடாஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொலிசார் நடத்திய தீவிர விசாரணையை தொடர்ந்து , யுவதியின் சகோதரி மற்றும் அவரது கணவன் இன்று மதியம் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் தமது சகோதரியை கொலை செய்து வீசிய காட்டுப்பகுதியை சந்தேகநபர்கள் அடையாளம் காட்டினர்.

அங்கு நடத்தப்பட்ட சோதனையில் கொல்லப்பட்ட யுவதியின் மண்டையோடு, தோள்ப்பை என்பன மீட்கப்பட்டன.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிசார் நடத்திய விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்களின் பரம்பரை வீடு கொல்லப்பட்ட சகோதரியின் பெயரிலேயே இருந்த நிலையில் அந்த வீட்டை பெற்றுக்கொள்வதற்காகவே இந்த கொலை நடந்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

யுவதி வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது, கால்வாய் ஒன்றிற்கு அருகில் வைத்து கொட்டனால் தலையில் தாக்கி கொலை செய்து, சடலத்தை காட்டுக்குள் வீசியதாக சகோதரியும், அவரது கணவனும் வாக்குமூலமளித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.