யாழ்.நல்லூர் கோயில் வீதியில் தையல் நிலையம் தீ வைப்பு! (Video)


யாழ்ப்பாணம் நல்லூர் – கோயில் வீதியில் தையல் நிலையம் விசமிகளால் தீ வைத்து எரியூட்டப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நேற்று நள்ளிரவில் இடம்பெற்றுள்ளது.
நல்லூரில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரை சுட்டுக்கொன்ற வழக்கின் சந்தேகநபரின் குடும்பமே இந்தச் செயலை செய்த்ததாக தையலகத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.
“2009 டிசெம்பர் மாதத்திலிருந்து நல்லூர் கோவில் வீதியில் தையல் நிலையம் வைத்துள்ளேன். என்னை அந்த இடத்திலிருந்து அகற்ற அயலவர்கள் பல தடவைகள் முயற்சிகளை முன்னெடுத்தனர். மின்சார சபைக்கு முறைப்பாடு செய்து எனது கடைக்கான மின் இணைப்பையே துண்டித்தனர். பின்னர் உரிய காரணங்களைக் கூறி மீளவும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.
மேலும் எனது கடையின் பூட்டை உடைத்த அயலவர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு உள்ளது. இந்த நிலையிலேயே அவர்கள் இந்த இழி செயலை நேற்றிரவு செய்துள்ளனர்” என்று தையல் நிலைய உரிமையாளர் தெரிவித்தார்.