வெட்டுக்கிளியால் வரப் போகும் ஆபத்து… அண்டை நாடுகளுடன் சண்டை! பிரபல தமிழ் பஞ்சாங்கத்தின் கணிப்பு

உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் பாதிப்பே இன்னும் தீராத நிலையில், வெட்டுக்கிளியால் விவசாயம் பாதிக்கும், அண்டை நாடுகளுக்குள் சண்டை வரும் என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே கணிக்கப்பட்டுள்ளது, பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் புத்தாண்டு பிறப்பின் போது, கிரக சஞ்சாரங்களை வைத்து, ஆண்டு பலன் கணிக்கப்படுகிறது.

சித்திரை மாதத்துக்கு முன்பாகவே, பஞ்சாங்கங்கள் அச்சிட்டு, விற்பனைக்கு வருகிறது. கடந்த விகாரி ஆண்டு பஞ்சாங்கத்தில், ஆண்டின் இறுதியில் புதிய வைரஸ் நோய் உருவாகும் என, ஆற்காடு பஞ்சாங்கம் கணித்திருந்ததை, கொரோனா வந்ததும் தான், அனைவரும் உற்று கவனித்தனர்.

நடப்பு, சார்வரி ஆண்டு பஞ்சாங்கத்திலும், வெட்டுக்கிளி பூச்சிகளால், கடும் பாதிப்பு ஏற்படும். அண்டை நாடுகளான, பாகிஸ்தான், சீனா வலுக்கட்டாயமாக சண்டைக்கு வரும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூர் திருவருள் ஜோதிட கல்வி ஆராய்ச்சி மைய பேராசிரியர், மீனம் ராஜு பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு கூறுகையில், சார்வரி ஆண்டும் சிலவகை பாதிப்பு இருக்கும். ராஜாவாக புதன் வருவதால், காற்று, புயல் ஆபத்து இருக்க வாய்ப்புள்ளது.

பூச்சியினங்களால் அழிவு வரும். ராகு – கேது சஞ்சாரம் சரியில்லாததால், எல்லையில் போர் பதற்றம் உருவாகலாம்.

அரசு, பல வகையில் சிரமத்தை சந்திக்கும். மழை குறைவாக இருக்கும். பூச்சியினங்களால் விவசாயம் பாதிக்கவும் வாய்ப்புள்ளது. ஆக., மூன்றாவது வாரம் வரை, இதுபோன்ற குழப்பம் தொடரும். இறை வழிபாட்டின் மூலமாக, பாதிப்புகளை தவிர்க்கலாம் என்று கூறியுள்ளார்.