தலை துண்டித்து இளைஞர் படுகொலை….. 400 மீட்டர் தொலைவில் முட்புதரில் கிடந்த தலை!

தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதுடன், அப்பகுதியில் 1000 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள தலைவன்வடலி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவன் என்பவரின் மகன் சத்தியமூர்த்தி (வயது 20).

இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை வெளியே சென்ற சத்தியமூர்த்தி இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அவரை தேடி சென்றனர்.

அப்போது ஊருக்குக்கு அடுத்துள்ள உப்பாற்று ஓடை பகுதியில் ஒரு கோவில் அருகே முட்புதரில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சத்தியமூர்த்தி பிணமாக கிடந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

அது மாத்திரம் இன்றி, கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறி சத்தியமூர்த்தியின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் உடலை மீட்டு பல மணிநேர போராட்டத்துக்கு பின்னர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

மாணவர் கொல்லப்பட்ட கிடந்த இடத்தில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு முட்புதரில் சத்தியமூர்த்தி தலை கிடந்துள்ளது. அதனை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தலைவன்வடலியை சேர்ந்த சிலருக்கும், அருகே உள்ள கீழகீரனூரை சேர்ந்த சிலருக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்குள் மீண்டும் தகராறு நடந்துள்ளது. எனவே இதன் காரணமாக சத்தியமூர்த்தி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. இதற்கிடையே கீழகீரனூரை சேர்ந்த சில வீடுகளை ஒரு கும்பல் சூறையாடியது.

அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க கூடுதல் எஸ்.பி. குமார், 9 டி.எஸ்.பி.கள் உள்பட தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 1000 பொலழஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.