யாழ் மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டது எச்சரிக்கை

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இவ்வருடத்தில் இதுவரை 2 ஆயிரத்து 195 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே மக்கள் தமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் டெங்கு நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியாது என்று யாழ் போதனா வைத்தியசாலை பொது மருத்துவ நிபுணர் தம்பிப்பிள்ளை பேரானந்தராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய டெங்கு தாக்கம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது;

தற்போது டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்ககூடிய சாத்திய கூறுகள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காணப்படுகின்றது. எனவே டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான முயற்சியில் சுகாதாரப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். மாவட்டச் செயலாளர், அடுத்த வாரத்தை டெங்கு விழிப்புணர்வு வாரமாக அறிவித்துள்ளார்.

டெங்கு நோயினால் கடந்த வருடம் இலங்கையில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தார்கள்.

அதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த வருடம் எட்டாயிரம் பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள்.

அவர்களுக்குரிய சிகிச்சைகள் உரிய முறையில் வழங்கப்பட்டது. எனினும் இந்த வருடம் மே மாதம் வரை 2 ஆயிரத்து 195 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களுக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிக்கப்படுகின்றன.

டெங்கு நுளம்புகள் குறிப்பாக மாலை வேளைகளில்தான் அதிகமாக மக்களை தேடிச்சென்று கடிக்கின்றது.

எனவே மக்கள் வீடுகளில் இருக்கும் போது மாலை நேரங்களில் தமது அறையின் கதவுகளை சாத்திவிட்டு இருப்பது மிகவும் சிறந்தது.

இல்லாவிட்டால் கொல்லி மருந்துகள் மற்றும் நுளம்புத்திரி போன்றவற்றினை கொளுத்தி வீடுகளில் வைப்பதன் மூலம் குறித்த நுளம்புத் தாக்கத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதன் மூலம் டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். என்றார்.