தந்தையின் கண்முன்னே துடிதுடித்து இறந்த மகன்கள்.. கண்ணீவிட்டு கதறிய சோக சம்பவம்..!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவருக்கு கணேஷ் (22) சிவராஜ்(18) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

கணேஷ் கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். சிவராஜ் அந்த பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.

கொரோனா காரணமாக கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டதால் அண்ணன், தம்பி இருவரும் வீட்டில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவதன்று, வீட்டில் இருக்கும் மகன்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க தமிழ்ச்செல்வன் முடிவு செய்துள்ளார். அதன்படி கீழ்வானி மாரியம்மன் கோவில் அருகே செல்லும் பவானி ஆற்றுக்கு நேற்று மாலை அழைத்து சென்றார்.

கரையில் நின்று தமிழ்ச்செல்வன் ஆலோசனை சொல்ல அதைக்கேட்டு மகன்கள் இருவரும் நீச்சல் பழகியுள்ளனர்.

திடீரென ஆழமான பகுதிக்குள் சென்ற கணேஷ் நீச்சல் தெரியாமல் தத்தளிக்க அவரை காப்பாற்ற தம்பி சிவராஜும் அதே பகுதிக்கு சென்றுள்ளார். இருவரும் தண்ணீரில் மூழ்க ஆரம்பிக்க இதைப்பார்த்த தமிழ்ச்செல்வன் சட்டென நீருக்குள் பாய்ந்து மகன்களை காப்பாற்ற முயன்றுள்ளார்.

அக்கம், பக்கம் குளித்துக்கொண்டு இருந்தவர்களும் உதவிக்கு வந்துள்ளனர். ஆனாலும் இருவரையும் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

சிறிது நேரம் கழித்து இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர். இதைப்பார்த்து தமிழ்ச்செல்வன் மகன்களின் மரணத்துக்கு தானே காரணமாகி விட்டதாக, கதறியழுத காட்சி காண்போர் நெஞ்சை உருக வைத்தது.

இதையடுத்து காவல்துறைக்கு தகவல் அளிக்க அவர்கள் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெற்றவர் கண்முன்னே மகன்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.