சிலிண்டரை வெடிக்க வைத்து 2 மகள்களுடன் தற்கொலை செய்த ஆசிரியை – உருக்கமான தகவல்

திருச்சி அருகே மகன் இறந்த துக்கத்தில் கியாஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து 2 மகள்களுடன் ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே நவல்பட்டு பூலாங்குடி காலனி பாரத்நகர் 8-வது வீதியில் வசித்து வந்தவர் முருகேசனின் மனைவி விஜயகவுரி (வயது 58). இவர் துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்றுவிட்டார். இவருடைய மகள்கள் விஜயலட்சுமி (32), விஜயவாணி (29), மகன் விஜயகுமார் (27). முருகேசன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.

கடந்த 10 மாதத்திற்கு முன்பு விஜயகுமார் அரியமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, லாரி மோதி விபத்துக்குள்ளானார். இதில் படுகாயம் அடைந்த அவர் கடந்த 8 மாதமாக கோமாவில் இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் விஜயகுமாரை விஜயகவுரி வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டில் அவர் படுத்த படுக்கையாகவே இருந்தார்.

இந்தநிலையில் நேற்று மாலை 5.30 விஜயகுமாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் விஜயகவுரி 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தார். உடனே 108 ஆம்புலன்ஸ் விஜயகவுரியின் வீட்டிற்கு வந்தது. அதில் இருந்த ஊழியர்கள் விஜயகுமாரை பரிசோதித்து விட்டு, அவர் இறந்து விட்டதாக கூறிச்சென்றனர்.

108 ஆம்புலன்ஸ் வந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர், ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் விசாரித்தபோது, இந்த வீட்டில் இருந்த வாலிபர் உடல் நலக்குறைவால் இறந்து விட்டதாக கூறிச்சென்றனர். விஜயகவுரி வீட்டில் உள்ளவர்கள் அக்கம், பக்கத்தில் யாரிடமும் அதிகம் பேசமாட்டார்களாம். இதனால் அவர்கள் இதுபற்றி யாரிடமும் கூறவில்லை. அக்கம் பக்கத்தினரும் அவருடைய வீட்டிற்கு துக்கம் விசாரிக்க செல்லவில்லை.

இந்தநிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் விஜயகவுரி வீட்டில் இருந்து ‘டமார்’ என்ற சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்த போது விஜயகவுரியின் வீடு இடிந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் 4 பேரும் கட்டிப்பிடித்தபடி உடல் கருகி கிடந்தனர். உடனே இதுபற்றி நவல்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், மகன் இறந்த துக்கத்தில் இருந்த விஜயகவுரியும், அவருடைய மகள்களும் விஜயகுமாரின் உடலை கட்டிப்பிடித்துக்கொண்டு கியாஸ் சிலிண்டரை வெடிக்கச்செய்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து 4 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகன் இறந்த துக்கத்தில் கியாஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து 2 மகள்களுடன் ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.