கனகராயன் குளத்தில் அதிகாலை விபத்து; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு

வவுனியா, கனகராயன் குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் பயணித்த மோட்டார் சைக்கிள் கனகராயன் குளம் பகுதியில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றது என்று கனகராயன் குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும், நல்லூர், அரசடி வீதியை சேர்ந்த ஜெயமூர்த்தி நிஷாந்த் மற்றும் அவரது நண்பரான யாழ்ப்பாணம் பலாலி வீதியை சேர்ந்த ஜானுசன் ஆகியோரே உயிரிழந்தனர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கனகராயன் குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.