கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி! தாலி கட்டும் நேரத்தில் தடுத்து நிறுத்தினார்

தமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் கணவனின் இரண்டாவது திருமணத்தை முதல் மனைவி தடுத்து நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மேட்டு இடையம்பட்டி ரோடு எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (45). இவர் தொரப்பாடியில் டெய்லர் கடை வைத்துள்ளார்.

இவருக்கு கமலி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த 19 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக ராமச்சந்திரன் கமலி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

இந்தநிலையில் கரூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தொரப்பாடியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு வந்தபோது ராமச்சந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டது.

ராமச்சந்திரன் அந்த இளம் பெண்ணை 2-வதாக திருமணம் செய்ய முடிவு செய்தார். நேற்று காலை அடுக்கம்பாறை அருகே உள்ள ஓசூர் அம்மன் கோவிலில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.

இதனால் கோவிலில் பூஜை செய்து தாலி கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த கமலி அவரது மகன்களுடன் கோவிலுக்கு சென்றார் .அப்போது மணக்கோலத்தில் இருந்த கணவனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அங்கிருந்தவர்களிடம் எடுத்துக்கூறி கணவரது திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.

இதனால் கமலிக்கும் 2-வது திருமணத்திற்கு வந்திருந்த பெண் வீட்டாருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

மேலும் இது தொடர்பாக வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கமலி புகார் அளித்தார்.

இதனால், அனைத்து மகளிர் பொலிசார் ராமச்சந்திரன் மற்றும் இளம்பெண் உறவினர்களை காவல் நிலையத்துக்கு அழைத்தனர். அப்போது ராமச்சந்திரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் உடனடியாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.