யாழில் வீட்டுக்குள் வைத்து பூசகர் திடீர் கைது

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் கசிப்பை வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏழாலையைச் சேர்ந்த பூசகர் ஒருவரே இவ்வாறு 27 லீற்றர் கசிப்பை வீட்டின் குளியலறையில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

காங்கேசன்துறை பிராந்திய பொறுப்பதிகாரி தலைமையிலான சிறப்புக் குற்றத்தடுப்புப் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபர் அடுத்தவாரம் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

இதே வேளை இந்த பூசகர் இதே குற்றச்சாட்டில் ஏற்கனவே ஒரு தடவை கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் தண்டம் அறவிடப்பட்டு விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.