அக்கரப்பத்தனை பகுதியை தாக்கிய பாரிய கற்பாறைகள்: மயிரிழையில் உயிர்தப்பிய மக்கள்!


அக்கரப்பத்தனை ஆகுரோவா தோட்டத்தில் சுமார் 150 அடி உயரத்தில் இருந்து பாரிய கற்பாறைகள் சரிந்து விழுந்ததால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை  தீடிரென அப்பகுதியில் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்ததாகவும், இந்த பாரிய ஆபத்தில் இருந்து அப்பகுதி மக்கள் மயிரிழையில் உயிர்தப்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அதிஷ்டவசமாக அங்குள்ளவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

21 குடும்பங்களை சேர்ந்த 150 இற்கு மேற்பட்டவர்கள் வாழ்ந்து வரும் குறித்த பகுதியில், மண்சரிவு ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் தினமும் வாழ்ந்துவருவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த மக்களிடம் சந்தா பணம் வாங்கும் தொழிற்சங்கங்களும், வேலை வாங்கும் தோட்ட நிர்வாகமும் வாக்கு வாங்கும் அரசியல் வாதிகளும் வாழ்க்கை முறை தொடர்பில் பாராமுகமாக இருந்துவருதாகவும் இதுகுறித்து அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.