2020 இல் ஆட்டிப்படைக்கும் தீராத நோயும் பகையும் தீர இந்த விரதம் இருங்க?

வேத ஜோதிடத்தில் அசுவினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்களில் விசாகம் நட்சத்திரம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். குருபகவானின் ஆதிக்கத்தில் வரும் நட்சத்திரம்.

இந்த ஆண்டு வைகாசி விசாகம் குருவின் அருள் நிறைந்த வியாழக்கிழமையில் வருவது சிறப்பு. வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். எதிரிகள் பயம் அகலும், தீராத நோய்கள் தீரும்.

குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த பகை விலகி பாசம் பெருகும்.

கார்த்திகை, பூசம், விசாகம் முருகனுக்கு உகந்த நட்சத்திரம். வைகாசி விசாக தினத்தன்று வேலனை வழிபட்டால் வெற்றிகள் வந்து சேரும்.

அசுரர்களை அழிக்க சிவ பெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து அக்னி ரூபமாக அவதரித்தவர் முருகன். இந்த அவதாரம் நிகழ்ந்தது வைகாசி விசாக நாளில்தான் என்கின்றன புராணங்கள்.

விசாக நட்சத்திர நாளில் முருகனை விரதம் இருந்து வழிபடுவோருக்கு அல்லல்கள் தீரும். துன்பங்களும் துயரங்களும் நீங்கும். குடை, மோர், பானகம், தயிர்சாதம் போன்றவைகளை தானம் செய்தால் பிள்ளை வரத்திற்காக தவம் இருப்பவர்களுக்கு புத்திர பாக்கிய கிடைக்கும் குலம் தழைக்கும் என்பது நம்பிக்கை.

முருகனுக்கு விசாகம் விரதம்
முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் எடுத்தாலும், வைகாசி விசாக விழாதான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகின்றது. விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் வெற்றி கிடைக்கும் விரும்பியது நடக்கும்.

கொரோனா வைரஸ் லாக்டவுனால் கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் முருகனை நினைத்து வீட்டிலேயே விரதமிருந்து வழிபட்டால் இடையூறு சக்திகள் விலகும்.

லட்சியங்கள் நிறைவேறும். விநாயகரை வழிபட்டு முருகனின் படத்தை பூஜை அறையில் வைத்து கந்தப் பெருமானை உள்ளத்திலும், இல்லத்திலும் நினைத்து வழிபட்டு வரலாம்.

வைகாசி விசாகம் விரதம் இருப்பவர்கள் ஒருவேளை உணவு சாப்பிடலாம். மற்ற இரண்டு நேரங்களில் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும். வீட்டு பூஜையறையில் முருகப்பெருமான் படத்தை வைத்து வழிபடலாம். எதிரிகளால் ஏற்படும் ஆபத்துக்கள் நீங்கும்.

கந்த சஷ்டி கவசம்
விசாகம் நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து பூஜை அறையில் முருகப்பெருமான் படத்தின் முன்பு ஐந்து முக விளக்கேற்றி வழிபட வேண்டும்.

ஐந்து வகை பூக்கள், பழங்களை சமர்பித்து கந்தனுக்கு பிடித்த கந்தரப்பத்தையும் வைத்து கந்தர் சஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும்.

திருப்புகழை படிக்க வேண்டும். ஆறெழுத்து மந்திரங்களான ஓம் சரவணபவா என்ற மந்திரத்தை நாள் முழுவதும் உச்சரிக்க வேண்டும்.

வைகாசி விசாகம் நாளில் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்தால் ஆயுள் கூடும் பச்சரிசி மாவில் அபிஷேகம் செய்தால் பட்ட கடன்கள் தீரும் நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்தால் நன்மைகள் நடைபெறும்.

பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் காரிய வெற்றி கிடைக்கும். சந்தன அபிஷேகம் செய்தால் சரும நோய்கள் நீங்கும். பன்னீர் அபிஷேகம் செய்து முருகனை வழிபட்டால் பார் போற்றும் செல்வம் சேரும். தம்பதி சமேதராக விசாகம் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் பிள்ளை பாக்கியம் தேடி வரும்.

நோய் கடன் எதிரி தொல்லை தீரும்
ஒருவருக்கு தீராத மன துயரத்தை தருவது கடன், நோய், எதிர்கள் பிரச்சினைதான்.

இந்த மூன்றும் இருந்தால் வாழ்நாளிலேயே சாகும் நிலைக்கு கொண்டு போய் விட்டு விடும் தீராத மன உளைச்சலை தரும்.

வைகாசி விசாகம் விரதம் இருப்பவர்களுக்கு தீராத நோய்கள் தீரும், எதிரிகள் தொல்லை அகலும், கடன் பிரச்சினைகள் தீரும்.