யாழில் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் வாளுடன் சிக்கினார்!

வட்டுக்கோட்டை, சங்கானைப் பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய கொள்ளைக் கும்பலைச் சேரந்த ஒருவர் வாளுடன் சிக்கினார். இந்தச் சம்பவம் வியாழக்கிழமை (28) 12.30 மணியளவில் வட்டுக்கோட்டை கள்ளி வீதியில் இடம்பெற்றது.
வட்டுக்கோட்டை கள்ளி வீதியில் நள்ளிரவுவேளை வாள்களுடன் நடமாடிய கும்பலைத் துரத்திச் சென்ற மாவடி இளைஞர்கள், அக்கும்பலைச் சேர்ந்த ஒருவரை மடக்கிப் பிடித்தனர். அவருடன் வந்ததாகக் கூறப்படும் மேலும் 5 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
மானிப்பாயைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே வாளுடன் பிடிபட்டார். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, கொள்ளையர்கள் நடமாடிய பகுதியிலுள்ள வீடோன்றுக்குள் கடந்தவாரம் கொள்ளை முயற்சி இடம்பெற்றது. அங்கு வசிக்கும் பெண்ணின் கழுத்தை நெரிக்க முற்பட்ட போது, அந்தப் பெண் அபாயக் குரல் எழுப்பியதால் கொள்ளையர்கள் தப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.