கொரோனாவால் விதிக்கப்பட்டிருந்த மற்றுமொரு தடை நாளை முதல் நீக்கம்

கொழும்பு – கம்பஹா மாவட்டங்களில் பஸ் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த வரையறை தளர்த்தப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நாளை (08) முதல் கொழும்புக்கு பயணிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, சுற்றுலாக்களுக்கான பஸ்கள் மற்றும் பாடசாலை போக்குவரத்து பஸ்களையும் சாதாரண போக்குவரத்தில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 250 பஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் H. பண்டுக்க குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவால் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் ஸ்ரீலங்காவில் விதிக்கப்பட்டு இருந்த தடைகள் நீக்கப்பட்டு வந்தன.

அந்த வகையில் கொழும்பு – கம்பஹா விற்கு விதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து தடையும் நாளை முதல் நீக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.