யாழில் மீண்டும் கொரோனா அச்சம்! மூன்று வீடுகளை சேர்ந்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

யாழ்ப்பாணம் இணுவில் மற்றும் ஏழாலைப் பகுதியில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை நடத்துவதற்கான மாதிகரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகம் திரும்பிய இந்திய பிரஜைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை வந்திருந்து குறித்த இந்திய பிரஜை யாழ்ப்பாணத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். கொரோனாா பரவலை அடுத்து அவர் நாடு திரும்ப முடியாதிருந்தார்.

இந்நிலையில், கடந்த 31ம் திகதி அவர் தமிழகம் திரும்பியிருந்த நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த இந்திய பிரஜை சென்றிருந்ததாக கூறப்படும், இணுவில் மற்றும் ஏழாலை பகுதியிலுள்ள மூன்று குடும்பங்களை சேர்ந்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.