போண்டா என நினைத்து 6 வயது சிறுவன் வெடிகுண்டை கடித்து வெடித்ததால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சி தொட்டியம் அடுத்த அலகரை கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரன், இவர் பாப்பாபட்டி பகுதியில் உள்ள குவாரியில் செல்வக்குமார் என்பவரிடம் பாறையை உடைக்க பயன்படுத்தும் 3 நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி வந்துள்ளார்.
பின்னர் அவர்கள் கூட்டாளிகளுடன் சென்று மணமேடு பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் வெடிகளை வீசி, அந்த அதிர்வில் செத்து மிதக்கும் மீன்களை எடுத்துவிட்டு அதனை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பூபதி என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அவர்கள் ஆற்றுபகுதியில் இரண்டு வெடிகுண்டுகளை வெடித்த நிலையில் அங்கு மீதமிருந்த ஒரு வெடிகுண்டை பூபதி வீட்டில் வைத்துள்ளனர். இதனை வீட்டில் இருந்த பூபதியின் 6 வயது மகன் போண்டா என நினைத்து வெடிகுண்டை எடுத்து கடித்துள்ளான். வெடி வெடித்ததில் சிறுவனின் வாய் சிதறி பரிதாபமாக உயிரிழந்தான்.
இதனால், சிறுவனின் உடலை ரகசியமாக யாருக்கும் தெரியாமல் அவசர அவசரமாக அடக்கமும் செய்துவிட்டனர். ஆனாலும் இந்த விஷயம் போலீஸாருக்கு தெரிந்து வெடிகுண்டு வாங்கிய இருவரும், வெடிகுண்டை விற்பனை செய்தவர் உள்ளிட்ட மூவரையும் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.