யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் கல்முனையில் உயிரிழப்பு

அரச புலனாய்வுத் துறையில் கடமையாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்ம தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் கடமை அறையில் துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை(ஜூன் 19) மாலை 7 மணியளவில் அம்பாறை – கல்முனை பொலிஸ் நிலையத்தில் உள்ள அரச புலனாய்வு பிரிவில் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் மத்தி பிரதேசத்தைச் சேர்ந்த கே.கமலராஜ் (வயது -21) என்ற அரச புலனாய்வு உத்தியோகத்தராவார்.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு பிரிவு காரியாலயத்தில் கடமையாற்றிவரும் குறித்த உத்தியோகத்தர் சம்பவதினமான இன்று மாலை 6.30 மணியளவில் காரியாலயத்தில் தனிமையில் இருந்துள்ள நிலையில் பாதுகாப்புக்காக வைத்திருந்து (பிஸ்டல்) கைதுப்பாக்கியால் தனக்கு தானே தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை இடம்பெற்று வருவதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த வாரம் தென்மராட்சியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் தென்பகுதி பொலிஸ் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.