கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறாரா நயன்தாரா?.. விக்னேஷ் சிவன் அளித்த விளக்கம்

நடிகை நயன்தாராவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, சமூக வலைத்தளங்களில் வந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகை மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கானோர் இதன் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஆயிரக்கணக்கானோர் பலியாகின்றனர்.

சென்னையிலும் இந்த வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்தத் தொற்றுப் பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை.

தெலுங்கு பட நடிகரும் தயாரிப்பாளருமான பண்ட்லா கணேஷூம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பிரபல நடிகை நயன்தாரா, இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், மிஷ்கின் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தங்களை தனிமைப்படுத்தி இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது. இதனால் தமிழ்த் திரையுலகம் பரபரப்பானது.

இந்நிலையில் இதுபற்றி இயக்குனர் விக்னேஷ் சிவன் தரப்பில் விசாரித்தபோது கோபமாக மறுத்துள்ளனர். தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் தாங்கள் தனிமைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார். இதுபற்றி தனது சமூக வலைத்தளப் பக்கத்தின் மூலம் அவர் தெரிவிக்க இருப்பதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.