குமார் பொன்னம்பலம் சந்திரிக்காவால் சுட்டுக் கொல்லப்பட்டார்! பகிரங்கமாக தெரிவிக்கப்பட்டுள்ள விடயம்

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை சர்வதேச அரங்கிற்கு நியாயப்படுத்திய வேளை குமார் பொன்னம்பலம் சந்திரிக்காவால் சுட்டுக் கொல்லப்பட்டார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும், கட்சியின் இணைப்பாளருமான தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாடு ஒற்றையாட்சி எனவும் பௌத்த சிங்கள நாடு எனவும் சம்பந்தன் ஐயா ஏற்றுக் கொண்டிருக்கின்றார்.

விடுதலைப் புலிகளால் நல்ல நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு வேறுபாதையில் செல்கின்றது எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலைக்கப்பட வேண்டும்.

நியமிக்கப்பட்டுள்ள செயலணி தன்னுடைய வேலையை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதியிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இந்த செயலணி நியமிக்கப்பட்டதன் பின்னர் சிங்கள பேரினவாத சக்திகள் பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் ஞானசார தேரர் இனவாத கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்.

200 வருடத்துக்கு பின்னரே இங்கு பௌத்தமதம் பற்றிய செற்பாடுகள் இருந்ததே தவிர விஜயனின் வருகைக்கு முன்னரே இலங்கைத் தீவிலே சிங்களவர்கள் பூர்வீக குடிகள் என்றதற்கான ஆதாரங்களை ஞானசாரதேரர் நிரூபிக்க வேண்டும் என சவாலாக விடுகின்றேன்.

இலங்கையில் தமிழர்கள் ஆதிக்குடிகள் என்பதற்கான ஆதாரம் இந்த சிங்கள அரசால் 1956ஆம் ஆண்டு விஜயனின் வருகை என்ற தலைப்புடன் ஒரு தபால் முத்திரை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த முத்திரை விஜயன் வருகையின் போது குவேனி இலங்கைத் தீவில் இருந்ததாகவும் இலங்கையில் தமிழர்கள் ஆதிக்குடிகள் என்பதை வெளிப்படையக சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவிதமாக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அறிந்து கொண்ட பேரினவாதிகள் இதனை உடனடியாக ரத்து செய்துள்ளனர்.

இன்று உலகில் முதல் 10 மொழிகளில் முதலாவது தமிழ்மொழி. எனவே இதனை இணையத்தளத்தில் சென்று ஞானசாரதேரர் மற்றும் ஏனைய சிங்கள தலைமைகள் பார்த்து தமிழர்களுடைய தொன்மையையும் வரலாற்றையும் படித்து விளங்கி கொள்ள வேண்டும். தமிழர்கள் தான் இந்த நாட்டின் பூர்வீக குடிகள் என்பதற்கான பல ஆதாரங்கள் இருக்கின்றது

விஜயனின் வருகைக்கு பின்னர் தேவநம்பியதீசன் காலத்திலே பாலி மொழியும் சமஷ்கிரதமும் சேர்ந்து தான் சிங்கள மொழி உருவானது. இப்போது பேசப்படுகின்ற சிங்கள மொழியில் 50 வீதம் தமிழ்மொழி இருக்கின்றது.

எனவே தமிழ் மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக இனவாத கருத்துக்களை தெரிவித்து தமிழ் மக்களை அடிமைகளாக மாற்றுவதற்கும் சிங்கள பௌத்த நாடாக கொண்டு வர ஞானசாரதேரர் செயற்பட்டு வருகின்றார்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களுடைய பூர்வீகதேசம் மரபுவழி தாயகம், மொழி கலை கலாச்சார பண்பாடு கொண்டவர்கள் நாங்கள்.

சிங்களவர்கள் எமது நிலப்பரப்பை அபகரித்து ஒட்டுமொத்த பௌத்த நாடாக திட்டமிடுகின்றது. இதற்காக தமிழ் மக்களிடையே சோரம்போகின்ற அரச கட்சிகளுடன் சேர்ந்து செயற்படுகின்ற சில தலைவர்களைப் பயன்படுத்தி எங்களுடைய மக்களுடைய வாக்குகளை பெற்று இவ்வாறான திட்டங்களைத் தீட்டிவருகின்றனர்.

மட்டக்களப்பை கைப்பற்றுவதற்கான சூழ்ச்சிகள் நடைபெறுகின்றது. 2009 இற்கு முன்னர் வடக்கு, கிழக்கில் தமிழர்களின் தாயகத்தில் ஒரு அடிகூட சிங்களவர்களால் கைப்பற்றப்படவில்லை.

விடுதலைப்புலிகளின் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் நடுத்தெருவில் நிற்கின்றோம்.

கிழக்கில் பிரசித்திபெற்ற தாந்தாமலை, கச்சக்கொடிசுவாமிமலை, வாகரை போன்ற பல பிரதேசங்களை கையகப்படுத்துவதற்கான திட்டங்கள் தீட்டப்படுகின்றது இந்த விடயங்களை மக்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

எங்களுடைய போராட்டத்தை சிங்கள பேரினவாதத்துடன் நின்று காட்டிக் கொடுத்து கூட்டிக்கொடுத்து இந்த தமிழர்களுடைய முள்ளம் தண்டை உடைத்தெறிந்த இந்த சலுகைகளைப் பெறுகின்ற இந்த தரப்புகளை சரியாக விளங்கி கொள்ள வேண்டும்.

இந்த துரோக கும்பலுக்கு வாக்களிக்கப் போவதாக இருந்தால் கடவுளாலும் தமிழர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும்

அரிசி,மா, பருப்பு, பால்மா போன்ற பொருட்களை கொடுத்துவிட்டு தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்துவதற்காக மொட்டு, படகு, வீட்டுச் சின்னம் போன்ற பல கட்சிகள் இறக்கப்பட்டுள்ளன. மக்கள் தெளிவாக இருக்கவேண்டும்.

இவர்களுடைய எந்த கொள்கையும் தமிழ் மக்களின் நிலத்தை காப்பாற்றாது. ஒற்றுமை உரிமை என்கின்றனர். ஆனால் கிழக்கில் ஒற்றுமையை ஏற்படுத்தவில்லை கிழக்கை மீட்பதாக பலர் புறப்பட்டனர். ஆனால் இன்று மாற்று சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் தெளிவாக இருக்கவேண்டும். வடக்கு, கிழக்கில் அரசு எதிரியாக பார்க்கும் ஒரே ஒரு அணி கஜேந்திரகுமார் தலைமையிலான அணி சைக்கிள் சின்னத்தில் களமிறக்கப்பட்ட அணி.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் என்ன என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் எந்தக் காரணம் கொண்டும் தனிப்பட்ட நபர்களுக்காக நீங்கள் வாக்களிக்க வேண்டாம்.

கிழக்கில் களமிறக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகள் அல்லது வேட்பாளர்கள் ஒவ்வொருவரின் வரலாற்றை படியுங்கள் அதன்பிறகு வாக்களியுங்கள்

வடக்கு கிழக்கு தமிழர்களின் மரபுவழி தாயகம். இந்த தேசம் தாயகதேசமாக அங்கீகரிக்கப்பட்டால் மாத்திரமே இந்த நில அபகரிப்பை தடுக்கமுடியும்.

70 வருடமாக இனஅழிப்பு நடந்து வருகின்றது. இந்த நாடு ஒற்றையாட்சி எனவும் பௌத்த சிங்கள நாடு என சம்பந்தன் ஐயா பல சந்தர்ப்பத்தில் ஏற்றுக் கொண்டிருக்கின்றார். இது மட்டுமல்ல தேர்தல்கள் வரும்போது தீர்வு தொடர்பாக தெரிவிப்பார்.

தமிழர்களுக்கான மாற்றுத் தலைமை 2010 கஜேந்திரகுமார் தலைமையில் உருவாக்கப்பட்டுவிட்டது.

எனவே சம்பந்தன் ஐயா தமிழ் தேசிய கூட்டமைப்பை கலைத்துவிட்டு வீட்டுக்கு செல்லவேண்டிய ஒருவர்.

அவ்வாறே கருணா உண்ட வீட்டுக்கே வஞ்சகம் செய்தவர். அவர் தமிழ் மக்களைப் பெறுத்த மட்டில் செத்த பாம்புதான் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர்.

இந்த ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்தி சர்வதேச அரங்கிற்கு தனது கருத்துக்களை மிக தெளிவாக கஜேந்திரகுமாரின் தந்தையாரான குமார் பொன்னம்பலம் கூறிவந்தார்.

இந்த போராட்டம் நியாயப்படுத்தப்பட்டு வந்த சந்தர்ப்பத்தில் சந்திரிக்காவால் வெளிப்படையாக அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதற்காக விடுதலைப் புலிகளின் தலைவரால் முதல் முதலாக அவருக்கு மாமனிதர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

திருகோணமலையில் போட்டியிடும் சம்பந்தன் ஐயா தேற்கடிக்கப்படுவார். அவர் தோற்றால் தேசிய பட்டியல் மூலம் அவரை நியமித்து நாடாளுமன்ற உறுப்பினராக்க சுமந்திரன் மற்றும் மாவை திட்டமிட்டுள்ளனர்.

எனவே தமிழ் தாயகத்திற்காக செயற்படுகின்ற எமது சைக்கிள் அணிக்கு வாக்குகளை அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.