யாழ்ப்பாணத்தில் வாளால் கேக் வெட்டியவர் காணொளியால் சிக்கினார்!

யாழ்ப்பாணத்தில் வாளால் கேக் வெட்டி கொண்டாடிய காணொளி ஆதாரங்கள் சிக்கிய நிலையில் இன்று காலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரவு கொடிகாமம் தவசிகுளம் பகுதியில் ஹெல்மெட் இல்லாது மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை பொலிஸார் நிறுத்த முற்பட்டபோது அவர் நிறுத்தாது சென்றிருக்கின்றார்.

இதனையடுத்து அவரை பின்தொடர்ந்த பொலிஸார் அவரை மடக்கி சோதனை செய்தனர்.

அதன் போது அவருடைய மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்…

இந்நிலையில் அவருடைய தொலைபேசியை சோதனையிட்ட பொலிஸார் அதில் சில காணொளிகளை கண்ணுற்று அது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதில் கொண்டாட்ட நிகழ்வு ஒன்றில் கேக்கினை வாளால் வெட்டிக் கொண்டாடியமை தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையில் மிருசுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை நேற்று கைதானவர் உசன் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.