கருணாவிற்காக தயாராகிறது சிறை! அரசாங்கம் வகுக்கும் திட்டம் அம்பலம்

தேர்தலுக்கு இரண்டு வாரங்கள் இருக்கும் போது கருணாவை சிறையில் அடைப்பார்கள். சிறைச்சாலைகளில் கட்டில், குளிர்சாதனப் பெட்டி, தொலைபேசி என அனைத்தும் உள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தங்காலை தொகுதியில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் பேசிய அவர்,

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் தற்போதைய அரசாங்கம் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் தனக்கு இருக்கிறது. ஏப்ரல் 21 ஆம் திகதி குண்டு தாக்குதல்கள் நடக்கின்றன. 27 ஆம் திகதி ஒரு தொலைக்காட்சி கோட்டாபய ராஜபக்சவை நேரடி நிகழ்ச்சிக்கு அழைத்து வருகிறது.

நாடு ஆபத்தில், நாட்டை பொறுப்பேற்க விருப்பமா என்று அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோட்டாபயவிடம் கேட்கிறார். ஆம் நான் தயாராக இருக்கின்றேன் என்று கோட்டாபய ராஜபக்ச கூறினார். எப்படி விளையாட்டு?, அதன் பின்னர் எப்படி திட்டங்களை தீட்டியுள்ளனர்?. நடந்த அழிவுகள், ஊடகங்கள் நடத்திய விளையாட்டுக்கள் எப்படி?.

நூற்று 52 வீதத்தை கோட்டாபய ராஜபக்ச பெற்றார். சஜித் பிரேமதாச 42 வீதத்தை பெற்றார். கோட்டாபய ராஜபக்சவுக்கு கிடைத்த வாக்குகளில் 5 சத வீதம் சஜித் பிரேமதாசவுக்கு கிடைத்திருந்தால், இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ண நேரிட்டிருக்கும்.

ஜே.வி.பியினர் தமது இரண்டாவது விருப்பு வாக்குகளை சஜித் பிரேமதாசவுக்கே வழங்கியிருந்தனர். இதனை நடக்கவிடாமல் தடுக்கவே ரணில் விக்ரமசிங்க, தானே பிரதமர் என்ற கதையை கூறினார். சஜித் பிரேமதாசவின் வெற்றியை தடுக்கவே ஈஸ்டர் குண்டு தாக்குதலும் நடத்தப்பட்டது. எனது கொள்கைகளின் அடிப்படையில் நான் பொய் சொல்ல மாட்டேன்.

எனக்கும் கர்தினாலும் இடையில் பிரச்சினையில்லை. எனினும் ஊடகங்களுடன் பிரச்சினை இருக்கின்றது.

இராணுவத்தை சேர்ந்த மூவாயிரம் பேரை கொன்றதாக கருணா அம்மான் கூறுகிறார். அவரை குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைப்பார்கள் என்று நான் முன்கூட்டியே கூறினேன். அதேபோல் நடந்தது. தேர்தலுக்கு இரண்டு வாரங்கள் இருக்கும் போது கருணாவை சிறையில் அடைப்பார்கள்.

சிறைச்சாலைகளில் கட்டில், குளிர்சாதனப் பெட்டி, தொலைபேசி என அனைத்தும் உள்ளன. இரண்டு வாரங்கள் உள்ளே வைப்பார்கள். அப்போது வடக்கில் தமிழ் மக்கள் கருணா எமக்காக சிறைக்கு சென்றார் என நினைப்பார்கள். இதனால், கருணாவை காப்பாற்ற நாம் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என எண்ணுவார்கள். இதுதான் அரசாங்கத்தின் தேர்தல் தில்லுமுல்லு.

எவருக்கு உள்ளே வரக் கூடிய வகையிலேயே நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை உருவாக்கினோம். அரசியலில் இருந்து இன்னும் சிலர் விலகி செல்ல உள்ளனர். சரத் பொன்சேகாவுக்கும் அந்த நிலைமையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இதற்கு எந்த காரணங்களும் இல்லை. நேர்மையாக அரசியலில் ஈடுபட்டு வருவதே இதற்கு காரணம்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும். இதனை நான் அச்சமின்றி கூறுகிறேன். அவர்தான் அன்றைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி. முப்படை தளபதி, பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ், புலனாய்வு பிரிவு என அனைத்தும் அவரது கட்டுப்பாட்டில் இருந்தன.

யானையே சஜித் பிரேமதாசவை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற இடமளிக்கவில்லை. நாங்கள் யானையை நேசிக்கின்றோம். எனினும் தற்போதுள்ள யானை பாகன் பைத்தியகாரன். யானை பாகனை மாற்ற வேண்டும். சஜித் பிரேமதாசவிடம் குறைப்பாடுகள் இருக்கின்றன என்று நினைக்க வேண்டாம் எனவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.