கருணாவை காப்பாற்றினார் மஹிந்த! அடுத்த அவதாரம்

கருணா எத்தனை பேரை கொன்றார், ஆறுமுகன் தொண்டமானின் இறுதி ஊர்வரத்தினால் கொரோனா பரவுமா போன்ற சின்னச்சின்ன விடயங்களை கைவிட்டு விட்டு, கோத்தாபயவின் சாதனைகளை மக்கள் கவனிக்க வேண்டுமென நாட்டு மக்களிடம் கோரியுள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.

இலங்கைக்கு எதிரான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சதிகளை தோற்கடிப்பது என்ற தலைப்பில் பிரதமர் ராஜபக்ஷ நேற்று நாட்டு மக்களிற்கு உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரிவினைவாதத்தையும், பயங்கரவாதத்தையும் கைவிட்டு புலிகளில் இருந்து பிரிந்த கருணா, புலனாய்வு பிரிவினரிடம் சரணடைந்தார்.

இதனால் புலிகளுடன் சேர்ந்து கருணாவும் அழிந்து போகவில்லை. கருணா அம்மான் புலிகளுடன் இருந்தபோது, இராணுவ முகாம்களை தாக்கி நூற்றுக்கணக்கான இராணுவத்தினரை கொன்றதாக கூறியதை நல்லாட்சி எதிரணி கடுமையாக விமர்சித்தது.

இது தொடர்பில் சமூகத்தின் கவனத்தை திருப்பி. எதிரணியினர் பிரதான பிரச்சனையிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப முயல்கிறார்கள்.

2005இல் நான் ஜனாதிபதியாக தெரிவான பின்னர் புலிகள் இயக்கத்தை முற்றாக அழித்தோம். பிரிவினைவாதத்தையும், பயங்கரவாதத்தையும் கைவிட்டு சரணடை்தார். இதன் காரணமாகவே புலிகளுடன் சேர்ந்து அவர் அழியவில்லை. பிரபாகரனின் சடலத்தையும் அவர்தான் அடயாளம் காட்டினார்.

சரியான நபர்களிற்கு வாக்களிக்குமாறு கோருபவர்களின் கடந்தகாலம் குறித்தும் கருணா சுட்டிக்காட்டியிருந்தார். பயங்கரவாதிகளின் மனத வெல்வதற்கு துரதிஷ்டவசமாக, லொறி லொறியாக ஆயுதங்களையும், பணத்தையும் அவர்களிற்கு வழங்கினார்கள்.

இந்த ஆயுதத்தை பயன்படுத்தியே புலிகள் எம்மை தாக்கினார்கள். 2002இல்யுத்த நிறுத்தம் செய்து, வடக்கு கிழக்கை அவர்களிற்கு எழுதிக் கொடுத்தார்கள். நாட்டை துண்டாட நல்லாட்சி அரசியலமைப்பொன்றை கொண்டு வர முயன்றது.

கருணா ஆட்கொலை செய்த காலத்திலும், இன்றும் நாட்டை துண்டாடும் நிகழ்ச்சி நிரலே நல்லாட்சி அரசிடமுள்ளது. அதனை அவர்கள் கைவிடவில்லை. கருணா கூறிய விடயம் தொடர்பில் சிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.

2019 ஜனாதிபதித் தேர்தலில் நல்லாட்சிக்காரர்கள் வெற்றி பெற்றிருந்தால், அவர்கள் வெளிநாட்டு சதிகாரர்களின் நிகழ்ச்சி நிரல்களை இலங்கையில் நிறைவேற்றியிருப்பார்கள். அவர்கள் தோல்வியடைந்தாலும், மேற்குலகத்தின் அந்த முயற்சி இன்னும் முடியவில்லை. அதை தோற்கடிக்க, இந்தத் தேர்தலில் எங்களுக்கு மிகவும் வலுவான ஆணை தேவை.

இலங்கை மக்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால், அரசியலில் ஒரு பரந்த படத்தை மனதில் கொள்ள வேண்டும்.

அரசியல் ரீதியாக முக்கியமானது மற்றும் அரசியல் ரீதியாக முக்கியமற்றது எதுவென்பதை வேறுபடுத்தி பார்க்க வேண்டும்.

முக்கியமில்லாதவற்றிலிருந்து முக்கியமானவற்றை நாம் வேறுபடுத்தி, எப்போதும் பரந்த படத்தை மனதில் வைத்திருந்தால், எங்கள் மக்கள் எப்போதும் வெற்றியாளர்களாக இருப்பார்கள்.

கருணா இராணுவத்தினரை கொன்றாராஈ ஆறுமுகனின் இறுதி ஊர்வலத்தில் சமூக இடைவெளி பேணப்பட்டதா போன்ற விடயங்களை விட்டுவிட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் புதிய ஜனாதிபதியின் பங்கை பாருங்கள். உலகிலேயே கொரோனாவை வெற்றிகரமாக கையாண்ட நாடு நாம்தான்.

நல்லாட்சி அரசில் முன்னணி பௌத்த பிக்குகளை அவர்கள் மோசடி குற்றச்சாட்டில் சிறையில் அடைத்துள்ளனர். பயங்கரவாதத்தை பாதுகாத்து, பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதிசெய்த நமது ஆயுதப் படைகளை மனச்சோர்வடையச் செய்வதற்கும் பயனற்றவையாக மாற்றுவதற்கும் அவர்கள் முயன்றனர்.

சாதாரண இராணுவ வீரர் முதல், பாதுகாப்புப் படைத் தலைவர் வரை பலரை கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இலங்கையின் ஒருமைப்பாட்டை சிதைத்து, நாட்டை பிளவுபடுத்துவது அவர்களின் குறிக்கோள்

இவர்கள் போர்வீரர்கள் அல்ல, ஆனால் திருடர்கள் மற்றும் கொலைகாரர்கள் என்ற கருத்தை உள்ளூரிலும், உலகத்திலும் பரப்பவதே இதன் நோக்கம். போரின் மூலம் அவர்களால் அடைய முடியாதவை, அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அடைய முயல்கிறார்கள்.

நல்லாட்சி சதிகாரர்கள் தங்கள் வெளிநாட்டு எஜமானர்களுக்கு வழங்கிய முக்கிய உறுதிமொழிகளே,ஐ.நா தீர்மானம் 30/1 இல் அடங்கியுள்ளன. நல்லாட்சிக்காரர்களின் ஆட்சியில் நாடாளுமன்ற கலரியில் மேற்குலக தூதர்கள் உட்கார்ந்திருந்து நாட்டுக்கு எதிரான பல மடிவுகளை கைதட்டி வரவேற்றனர் என்றார்.