விடுதலைப் புலிகளால் ஒரே தடவையில் அதிகபட்சம் எத்தனை படையினர் கொல்லப்பட்டனர்? பொன்சேகா வெளியிட்ட தகவல்

ஒரே இரவில் 2000 – 3000 படையினரை கொன்றதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் கருணா வெளியிட்ட தகவலை முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மறுத்துள்ளார்.

பிபிசி தமிழ் செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்படி, 2000 – 3000 வரையான படையினர் ஒரே இரவில் கொல்லப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், முல்லைத்தீவு பகுதியில் நிராயுதபாணிகளாக விடுதலைப் புலிகள் வசம் சிக்கிய 1200 இராணுவத்தினர் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், 1990ம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் நிராயுதபாணிகளாக சிக்குண்ட 600 பொலிஸார் விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்டனர்.

இலங்கை வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிகளவான பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவமும் இதுவாகும்.

தாம் படையினரை கொன்றதாக தெரிவிக்கும் கருணா, ஒரு பயங்கரவாதியாகவே இதனை செய்துள்ளார். ஆகையினால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனினும், ராஜபக்ச குடும்பத்தினர் கருணாவை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ராஜபக்ச ஆட்சியில் கருணா எப்போதும் தண்டிக்கப்பட மாட்டார் என்பதே உண்மை.

எனினும், தமது அரசாங்கமொன்று ஆட்சிக்கு வரும் பட்சத்தில், நிச்சயமாக கருணா மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, அண்மையில் தேர்தல் பிரசாரம் ஒன்றின் போது, தாம் ஒரே இரவில் 2000 – 3000 படையினரை கொன்றதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா தெரிவித்திருந்தார்.

இது தென்னிலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து அண்மையில் குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை கருணா வழங்கியிருந்தார்” என்பது குறிப்பிடத்தக்கது.