யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 24,829 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 24,829 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக உதவி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள பாரளுமன்ற தேர்தலுக்காக தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்த அஞ்சல் வாக்காளர்களுக்கான வாக்கு சீட்டுக்கள் மற்றும் ஏனைய ஆவணங்களை பொதியிடும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட அஞ்சல் வாக்காளர்களுக்கான வாக்குசீட்டு பொதியிடும் பணி இன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் காலை ஆரம்பமாகியதாக
யாழ்மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கி.அமல்ராஜ் தெரிவித்தார்.

தபால்மூல வாக்கு சீட்டு பொதியிடும் பணி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்

இந்த பணிகள் நாளை வரை இடம்பெறவுள்ளது. யாழ்மாவட்டத்தில் 21,239 அஞ்சல் வாக்காளர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு பொதியிடும் பணி நடைபெற்று வருகின்றது.அதே போல் கிளிநொச்சி மாவட்டத்தில் 3,590 ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்காளர்களுக்கான பொதியிடும் பணிகள் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.

யாழ் மாவட்டத்தினை பொறுத்தவரை 22 நிலையங்களில் பொதியிடும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. இவ்வாறு பொதியிடப்பட்ட ஆவணங்கள் நாளை முதல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு கிடைக்கபெறும். எனவே நாளை முதல் கிடைக்கபெறும் பொதிகள் தொடர்பாக மேலதிக நடவடிக்கையினை மேற்கொள்வார்கள். எதிர்வரும் ஜீலை மாதம் 13ம் திகதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான வாக்களிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

14,15ம் திகதிகளில் ஏணைய அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான அஞ்சல் வாக்களிப்பு இடம்பெறும்.16,17ம் திகதிகளில் மாவட்ட செயலகம் முப்படையினர் பொலிஸாருக்கான தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.

தபால்மூல வாக்கு சீட்டு பொதியிடல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்..

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்த அஞ்சல் வாக்காளர்களுக்கான வாக்கு சீட்டுக்கள் மற்றும் ஏனைய ஆவணங்களை பொதியிடும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளது. குறித்த பணியானது இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.