சமகாலத்தில் வெளிநாடுகளிலிருந்து இலங்கை வந்தவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டுக்கு வருகைத்தர முடியாத நிலையில், பல நாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அவ்வாறு அழைத்து வரப்பட்ட இலங்கையர்களுக்கு கிடைக்கும் தீர்வை வரியற்ற பொருட்களை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. எனினும் அவர்களுக்கு அந்த சந்தர்ப்பத்தை மீண்டும் ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

தற்போது வரையில் பல்வேறு நாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்கள் 13000 பேர் வரையில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எனினும் குறித்த இலங்கையர்களுக்கு தீர்வை வரியற்ற பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போயுள்ளது.

இதனால் நாள் ஒன்றுக்கு 100 பேர் வரையில் இந்த முறையில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பயணிகளை விமான நிலையத்திற்கு மீண்டும் அழைத்து, தீர்வையற்ற கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

குறித்த இலங்கையர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதி செய்த கடிதங்களுடன் விமான நிலையத்திற்கு வருகைதர வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.